India

“தப்பு பண்ணலன்னா விவாதிக்க பயம் ஏன்?" : மோடி அரசுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கேள்வி! #Pegasus

இஸ்ரேலின் உளவு மென்பொருளான பெகாஸஸ் மூலம் இந்தியாவின் முக்கிய அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உளவு பார்க்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இஸ்ரேலின் என்.எஸ்.ஓ அமைப்பின் பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் இந்தியாவில் 40 பத்திரிகையாளர்கள், ஒன்றிய அமைச்சர்கள் உள்ளிட்ட பலரின் செல்போன் ஒட்டுக் கேட்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. இதுகுறித்து ஆதாரப்பூர்வமான செய்தியை சர்வதேச அளவில் தி நியூயார்க் டைம்ஸ், கார்டியன், லீ மாண்டே ஆகிய நாளேடுகள் வெளியிட்டுள்ளன.

பெகாசஸ் ஸ்பைவேர் ஒட்டுக்கேட்பு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், யாருடைய செல்போனும் கண்காணிக்கப்படவில்லை என்று கூறிவரும் ஒன்றிய மோடி அரசு தொடர்ந்து விவாதிக்க மறுத்து வருகிறது.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், எம்.பியுமான திக்விஜய் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், “நாடாளுமன்றத்தில் பெகாசஸ் விவகாரத்தை விவாதிக்க பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா அஞ்சுவது ஏன்?

உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக ஒருவரை சட்டப்பூர்வமாகக் கண்காணிப்பதை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் என்.எஸ்.ஓ நிறுவனம் மற்றும் இஸ்ரேலுக்கு இந்தியர்களின் தகவல்களை வழங்க யாரும் அரசுக்கு அனுமதி வழங்கவில்லை” எனச் சாடியுள்ளார்.

இதுதொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் எம்.பி., இன்று வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “இந்தியாவில் பெகாசஸ் மென்பொருளை பயன்படுத்தியது யார்? என்.எஸ்.ஓ அமைப்பின் இந்திய வாடிக்கையாளர் யார்?

இந்திய அரசு பெகாசஸ் மென்பொருளை பயன்படுத்தியதா? ஒன்றிய அரசின் விசாரணை அமைப்புகள் ஏதும் பெகாசஸ் மென்பொருளை பயன்படுத்தியதா, அல்லது தனியார் அமைப்புகள் ஏதேனும் பெகாசஸை பயன்படுத்தினார்களா?

இந்தியாவில் பெகாசஸ் மென்பொருளை பயன்படுத்தியது யார்? என்.ஸ்.ஓ அமைப்பின் இந்திய வாடிக்கையாளர் யார் என்பது விரைவில் வெளியாகும். அதுவரை, ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் ஒன்றிய அரசு துணிச்சலாக எதிர்கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: கர்நாடகாவின் அடுத்த முதலமைச்சர் யார்? - ரேஸில் முந்தும் அமைச்சர்கள்... இன்று மாலை முக்கிய அறிவிப்பு!