India

"3 ஆண்டுகளில் 5,569 லாக்கப் மரணங்கள்... உ.பியில் மட்டும் 1,318 பேர்" : ஒன்றிய அமைச்சரின் அதிர்ச்சி தகவல்!

இந்தியாவில் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் காவல்நிலையங்களில் 5,569 கைதிகள் உயிரிழந்துள்ளதாக ஒன்றிய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மக்களவை குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 19ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கேள்வி நேரத்தின்போது காவல் நிலையங்களில் ஏற்படும் மரணங்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு ஒன்றிய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த ராய் பதில் அளித்துப் பேசும்போது, "இந்தியாவில் கடந்த மூன்று ஆண்டுகளில் காவல்நிலையங்களில் 348 பேரும், நீதிமன்ற காவலில் 5221 பேர் உயிரிழந்துள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் “இந்தியா முழுவதும் கடந்த 2018 -19 போலிஸ் காவலில் 136 கைதிகளும், நீதிமன்ற காவலில் 1,797 கைதிகளும் உயிரிழந்துள்ளனர். அதேபோல் 2019 -20ம் ஆண்டில் காவல்நிலையத்தில் 112 பேரும், நீதிமன்ற காவலில் 1,584 பேரும் உயிரிழந்துள்ளனர்.

அதேபோல், 2020 -21ஆம் ஆண்டில் காவல்நிலையத்தில், நீதிமன்ற காவலில் 1,840 பேரும் உயிரிழந்துள்ளனர். இந்த மூன்று ஆண்டுகளில் மொத்தமாக 5,221 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதில், உத்தர பிரதேச மாநிலத்தில் மட்டும் அதிகபட்சமாக 1,318 பேர் காவல்நிலையங்களில் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் 232 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் காவல்நிலையத்தில் 25 பேர் உயிரிழந்துள்ளனர்" எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: ஜார்க்கண்டில் ஆட்சியைக் கவிழ்க்க ரூ.1 கோடி பேரம்... பா.ஜ.க மீது காங்கிரஸ் MLA பரபரப்பு குற்றச்சாட்டு!