India

குடும்பத்திற்குள்ளேயே அடுத்தடுத்து கொலை... மூட நம்பிக்கை காரணமா? - ஜார்க்கண்டை உலுக்கிய கொடூர சம்பவம்!

ஜார்க்கண்ட் மாநிலம், கும்லா மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜ்பால் முண்டா. இவரின் அத்தை பின்சாரி தேவி. இவரும் கும்லா மாவட்டத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில் ராஜ்பால் முண்டாவின் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு சில நாட்களாக உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, குடும்பத்தில் இருப்பவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்படுவதற்கு அத்தை பின்சாரி தேவிதான காரணம் என ராஜ்பால் முண்டா நினைத்துள்ளார். மேலும் தனது குடும்பத்துக்கு அத்தை சூனியம் வைத்துவிட்டார் என்றும் அவர் நம்பியுள்ளார்.

பின்னர், அத்தை பின்சாரியை கொன்றாதால்தான், தனது குடும்பம் நன்றாக இருக்கும் என ராஜ்பால் நினைத்துள்ளார். இதற்காக திட்டமும் தீட்டி அத்தையை கொலை செய்வதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருந்துள்ளார்.

இதையடுத்து, மாமா மாக்தேவ் முண்டா, பண்ணைக்குச் சென்ற நேரம் பார்த்து, அத்தை வீட்டிற்குச் சென்ற ராஜ்பால், பின்சாரி தேவியை பார்த்து 'நீ ஒரு சூனியக்காரி' எனக் கூறி கையில் எடுத்துச் சென்ற கோடாரியால் அவரை சரமாரியாக வெட்டியுள்ளார். இந்த தாக்குதலில் சம்பவ இடத்திலேயே பன்சாரி தேவி உயிரிழந்தார்.

பின்னர், மாக்தேவ் முண்டா வீட்டிற்கு வந்து பார்த்தபோது தனது மனைவி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். மேலும் மனைவியை கொலை செய்தது ராஜ்பால் என்பதை அறிந்தவுடன் ஆத்திரமடைந் மாக்தேவ், ராஜ்பால் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அங்கு, 'என் மனைவியை ஏன் கொலை செய்தாய்' என ராஜ்பாலிடம் கேட்டுள்ளார். அதற்கு ராஜ்பால், ‘அவள் ஒரு சூனியக்காரி. அவளால் தான் என் குடும்பம் இப்படி ஆனது. அதனால்தான் கொலை செய்தேன்’ எனக் கூறியுள்ளார். இதைக்கேட்டு ஆத்திரமடைந்த மாக்தேவ், வீட்டில் இருந்த கோடாரியை எடுத்து ராஜ்பாலை தலையில் பலமாக தாக்கியுள்ளார். இதில் ராஜ்பால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலிஸார் இரு உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலிஸார் மக்தேவ் முண்டாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூட நம்பிக்கையால் அடுத்தடுத்து கொலை நடந்த சம்பவம் கும்லா மாவட்ட மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: சிறுமிகள் பாலியல் வன்கொடுமை.. புகார் அளித்தவருக்கு கத்திக்குத்து - பா.ஜ.க கும்பல் அட்டூழியம்!