India

“கொரோனாவை பரப்பும் யோகி அரசு?: கன்வர் யாத்திரைக்கு அனுமதி அளித்தது ஏன்?”- உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி!

இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை கோரத்தாண்டவம் ஆடியதை அடுத்து கடந்த ஒரு மாதமாகக் குறைந்து வந்த கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 41,806 பேர் புதிதாகத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே கொரோனா இரண்டாவது அலை துவங்கும் நேரத்தில், உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் கும்பமேளா திருவிழா நடைபெற்றது. இதில் நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர். ஹரித்வாரில் லட்சக்கணக்கானோர் குவிந்ததால் தொற்று பரவும் வேகம் அதிகரித்தது என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில், நாட்டில் கொரோனா மூன்றாவது அலை வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக ஒன்றிய அமைச்சகத்தின் மருத்துவ குழுவினரும், உலக சுகாதார அமைப்புகளும் எச்சரிக்கை விடுத்து வருகிறார்கள். மேலும் பொதுமக்கள் கட்டாயம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள்.

இந்நிலையில் உத்தர பிரதேச மாநிலத்தில் ஜூலை 25 ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் வரை நடக்கும் கன்வர் யாத்திரைக்கு அனுமதி வழங்கிய யோகி ஆதித்யநாத் அரசுக் உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. கன்வர் யாத்திரை தொடர்பான வழக்கு நேற்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள் ரோஹிண்டன் எஃப் நாரிமன் மற்றும் பி.ஆர்.கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு, “எதன் அடிப்படையில் யாத்திரைக்கு அனுமதி வழங்கப்பட்டது. கொரோனா காலத்தில் இத்தகைய செயல்பாடு என்பது சரியானதா’’ என கேட்டு, உத்தர பிரதேச அரசு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டு, வழக்கை வரும் 16ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

Also Read: பெங்களூரு வழக்கறிஞரை மிரட்டி அசிங்கப்பட்ட உத்தர பிரதேச அரசு... பொய்யும் புரட்டும்தான் பா.ஜ.க மாடலா?