India

1 லட்சம் முஸ்லிம் ஊழியர்கள் நீக்கப்பட்டனரா? - Amul நிறுவனம் குறித்து பொய்ச்செய்தி பரப்பும் மத வெறியர்கள்!

மதப் பிரிவினையை தூண்ட முயலும் இந்துத்வ வெறியர்கள் அமுல் நிறுவனம் குறித்து பொய்யான தகவலை சமூக வலைதளங்களில் பரப்பி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பால் உற்பத்தி பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான அமுல் குறித்த தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்தத் தகவல் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என அமுல் நிர்வாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.

அமுல் நிறுவனம் குறித்து சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் செய்தியில், “அமுல் மில்க் உரிமையாளர் ஆனந்த் சேத் தனது தொழிற்சாலையில் இருந்து 1 லட்சத்து 38 ஆயிரம் முஸ்லிம்களை வெளியேற்றினார். நாட்டின் இழிவான ஜிஹாத்தைப் பார்க்கும்போது, அழுக்கு பால், தயிர் மற்றும் நெய் ஆகியவற்றை எங்களால் மக்களுக்கு அளிக்க முடியாது.

இதுபோன்ற கொலையாளிகளை எங்கள் நிறுவனத்தில் வைத்திருக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார். அத்தகைய நடவடிக்கை எடுத்ததற்காக அமுல் பால் நிறுவனத்திற்கு மனமார்ந்த நன்றி...." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிபிசி செய்தி நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில், அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள ஆனந்த் சேத் எனும் பெயரில் அமுல் நிறுவனத்தில் எவருமே பணியாற்றவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.

மேலும், இதுகுறித்துப் பேசியுள்ள அமுல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆர்.எஸ்.சோதி, ​ “கடந்த இரண்டு ஆண்டுகளில் ஒரு பணியாளரைக்கூட நாங்கள் பணிநீக்கம் செய்யவில்லை. ஏனெனில் எங்கள் வணிகம் வளர்ந்துவருகிறது. நாங்கள் ஒரு ஊழியரை அகற்றினாலும்கூட அதற்கு மதம் ஒருபோதும் அடிப்படையாக இருக்காது” என்று தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் உள்ள அமுல் தொழிற்சாலைகளில் 16,000 முதல் 17,000 ஊழியர்கள் பணிபுரிகின்றனர். அவர்கள் தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்படுகிறார்கள், சமூக-மத பின்னணியின் அடிப்படையில் அல்ல என்று ஆர்.எஸ்.சோதி உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

இதன்மூலம், பொய்ச் செய்திகளைப் பரப்பி, மதப் பிரிவினையை ஏற்படுத்தும் முயற்சியின் ஒருபகுதியாக மத வெறியர்கள் இதுபோன்ற பொய்யான தகவல்களைப் பரப்பியிருப்பது தெரியவந்துள்ளது.

Also Read: "ஒரே கையெழுத்தில் தலையெழுத்தை மாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்”:புரட்சிகர திட்டம் என பெண்கள் நெகிழ்ச்சி!