India
பட்டியலின இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்; புதுச்சேரி பா.ஜ.கவினர் மீது நடவடிக்கை எடுக்காத போலிஸ்!
புதுச்சேரியில் பட்டியலினத்தை சேர்ந்த இளைஞரை கொலைவெறி தாக்குதல் நடத்தி பாஜக முன்னாள் எம்எல்ஏ, பாஜக பிரமுகர்களை வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கோரி காவல்துறை தலைமை அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற போலிஸாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
புதுச்சேரி மண்ணாடிப்பட்டு தொகுதி கொடுத்தூர் சேரி பகுதியை சேர்ந்த பட்டியலினத்தை சேர்ந்த இளைஞர் கார்த்திகேயனை கடந்த சில தினங்களுக்கு முன்பு பாஜக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அருள் முருகன் மற்றும் பாஜக பிரமுகர் வீரராகவன் ஆகியோர் தாக்கியதாக தெரிகிறது.
இளைஞர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அருள் முருகன், பாஜக பிரமுகர் வீரராகவன் உள்ளிட்ட 15 பேரை கைது செய்ய வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்திருக்கிறார்கள்.
ஆனால், இதுவரை குற்றவாளிகள் மீது போலிசார் வழக்குப்பதிவு செய்யாமல் வழக்கை மூடி மறைக்கும் வேலையில் ஈடுபடுவதை கண்டித்தும், உடனடியாக வழக்குப்பதிவு செய்து அனைவரையும் கைது செய்ய கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளர் பாவாணன் தலைமையில் 300க்கும் மேற்பட்டோர் பேரணி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்திரா காந்தி சதுக்கத்தில் இருந்து பேரணியாக வந்த விடுதலை சிறுத்தை கட்சியினர் காவல்துறை தலைவர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். அப்போது அவர்களை போலீசார் பழைய சட்டக் கல்லூரி செஞ்சி சாலை அருகே தடுத்து நிறுத்தினர். இதனையடுத்து காவல்துறை தடுப்புகள் மீது ஏறினர்.
அப்போது லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பிய அவர்கள் பின்னர் காவல்துறை தலைவரை சந்தித்து பேசினர். வன்கொடுமை சட்டத்தில் சம்பந்தபட்டவர்களை கைது செய்யவில்லை என்றால் மாநிலம் தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
முன்னதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் இந்த விவகாரம் தொடர்பாக போராட்டம் நடத்தியிருந்தும் புதுச்சேரி போலிஸார் பாஜகவினர் மீது நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக செயல்பட்டு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
வெளியான அதிர்ச்சி காணொளி.. தவெக அரசின் அலட்சியம்.. நோயாளிகளே குளுக்கோஸ் பாட்டிலை பிடித்து சிகிச்சை!
-
தொடரும் கொலைகள் : “குற்றவாளிகள் எல்லாம் தஞ்சமாகும் குப்பைத் தொட்டி...” - த.வெ.க.வை விமர்சித்த உதயநிதி !
-
“பிற்படுத்தப்பட்ட மக்களின் சமூகநீதி உரிமையை உறுதிசெய்ய வேண்டும்!” : மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!
-
சென்னையில் நள்ளிரவில் பயங்கரம்.. தவெக நிர்வாகி ஓட ஓட வெட்டி கொடூர கொலை.. பின்னணி என்ன?
-
Part Time Job : விளம்பர பதாகை வைத்த நந்தனம் கல்லூரி மாணவருக்கு நேரந்த சோகம்!