India

"2 குழந்தைகளுக்கு மேல்? அப்போ அரசு திட்டங்கள் இல்லை": உ.பியில் ஆபத்தான சட்டத்தைக் கொண்டு வரும் யோகி அரசு!

உத்திர பிரதேச மாநிலத்தின் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க அரசு 2021-2030 ஆம் ஆண்டுக்கான புதிய மக்கள் தொகை மசோதாவை ஜூலை 11ம் தேதி தாக்கல் செய்துள்ளது. மேலும் இம்மசோதா மீது ஜூலை 19ஆம் தேதிக்குள் பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.

இந்த வரைவு மசோதாவில், "இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருப்பவர்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் கிடையாது என்றும் உள்ளாட்சித் தேர்தலில் நிற்க முடியாது" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் "மாநில அரசுப் பணிகளுக்குத் தகுதியானவர்கள் கிடையது என்றும் தற்போது அரசுப் பணியிலிருந்தால் பதவி உயர்வு கிடையாது என்றும் எவ்விதமான மானியமும் கிடையாது" என பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதாவை அம்மாநில சட்ட ஆணையம் தயாரித்துள்ளது.

இந்த மசோதா அமல்படுத்தப்பட்டால், அனைத்து அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஒரு வருடத்திற்குள் பிரமாணப் பத்திரம் கொடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஒரு குழந்தையை மட்டும் பெற்றெடுக்கும் பெற்றோருக்கு மட்டுமே அரசின் நலத்திட்ட உதவிகள் கிடைக்கும் எனவும், அந்த குழந்தைக்கு 20 வயது வரை இலவச கல்வி, சிகிச்சை, காப்பீடு, அரசு வேலையில் முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வரைவு மசோதா மீது ஆட்சேபனைகள் இருந்தால் ஜூலை 19ம் தேதிக்குள் மின்னஞ்சல் அல்லது தபால் மூலம் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தைப் பின்பற்றாவிட்டால், அவர்களுக்கு அரசுவேலையில் பதவி உயர்வு பெற முடியாது, நியாயவிலைக் கடையில் நான்கு உறுப்பினர்களுக்கு மட்டுமே பொருட்கள் வழங்கப்படும். இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்ளும் பெற்றோருக்கு எந்தவிதமான அரசு மானியமும் பெற முடியாது என இந்த மசோதா மறைமுகமாக மக்களை எச்சரிக்கை செய்துள்ளது.

இதையடுத்து யோகி அரசு கொண்டு வர உள்ள மக்கள் தொகை வரைவு மசோதாவிற்கு அம்மாநில எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அடுத்தாண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்வைத்தே இந்த மசோதா குறித்தான வரைவு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும், இது அமல்படுத்தப்பட்டால் இஸ்லாமிய மக்களும் மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Also Read: “மோடி அரசின் ஒன்றிய அமைச்சரவையில் 33 பேர் மீது கிரிமினல் வழக்கு.. 90% பேர் கோடீஸ்வரர்கள்” : ATR தகவல்!