India

“இனியும் கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடிக்கும் வேலையில் இறங்கவேண்டாம்”: மோடி அரசை கிண்டல் செய்த ப.சிதம்பரம்

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து மக்கள் இன்னும் மீளாத நிலையில், பல்வேறு மாநிலங்களில் தடுப்பூசி பற்றாக்குறை நிலவி வரும் நிலையில் மோடி அரசின் ஒன்றிய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டு புதிதாக 42 அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர்.

ஒன்றிய அரசின் தடுப்பூசி கொள்கையால் தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் தடுப்பூசி தேவையான அளவு கிடைக்கப்பெறவில்லை. இதனால் தடுப்பூசி செலுத்தும் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் ஒரே நாளில் 86.16 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டதாக ஒன்றிய அரசு அறிவித்தது. இதை விமர்சித்த ப.சிதம்பரம், "ஞாயிற்றுக்கிழமையன்று பதுக்கி வையுங்கள்; திங்கள்கிழமையன்று தடுப்பூசி போடுங்கள்; செவ்வாய்க்கிழமை பழைய நிலைமைக்கே செல்லுங்கள். இதுதான் ஒருநாள் கொரோனா தடுப்பூசி சாதனை ரகசியம்.” எனச் சாடினார்.

இந்நிலையில், முன்னாள் ஒன்றிய அமைச்சரும் காங்கிரஸ் எம்.பி.,யுமான ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், “தடுப்பூசி இல்லாததால், தமிழ்நாட்டில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மீண்டும் தடைபட்டுள்ளன.

மாநிலங்களுக்குத் தேவையான தடுப்பூசிகளை எவ்வித இடையூறுமின்றி வழங்குவதை உறுதி செய்வதே புதிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவின் முதல் பணியாக இருக்கவேண்டும்.

இனியும் கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடிப்பதற்கான வேலையில் இறங்கவேண்டாம். மாநிலங்களுக்கு தடுப்பூசி விநியோகிப்பதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்” எனச் சாடியுள்ளார்.

Also Read: “சுகாதாரத்துறை அமைச்சரை நீக்கியதற்குப் பதிலாக, மோடியே பதவி விலகியிருக்க வேண்டும்” : கே.எஸ்.அழகிரி சாடல்!