India

“கூட்டாட்சிக்கு பொருந்தாத சட்டங்களை எதிர்த்து நில்லுங்கள்”: கேரள முதல்வர் பினராயி விஜயன் வேண்டுகோள்!

“கேரளத்தின் நலனுக்காக கேரள எம்.பி.க்கள், கட்சி வித்தியாசமின்றி ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்றும், ஒன்றிய பா.ஜ.க அரசு கொண்டுவரும் கூட்டாட்சிக்கு பொருந்தாத சட்டங்களை எதிர்த்து நிற்கவேண்டும்” என்றும் முதல்வர் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் ஜூலை 19-ஆம் தேதி துவங்கவுள்ள நிலையில், காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கேரளத்தின் அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் வீடியோ கான்பரன்ஸ் முறையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தான் முதல்வர் பினராயி விஜயன் மேற்கண்டவேண்டுகோளை வைத்துள்ளார்.

அதில் அவர் மேலும் பேசியிருப்பதாவது:- “நிகழ்ச்சி நிரலில் உள்ள பிரச்சினைகள் குறித்து மாநிலங்களுடன் கலந்துரையாடுவதைத் தவிர்ப்பதற்காக ஒன்றியஅரசே ஒருதலைப்பட்சமாகச் சட்டமியற்றி வருகிறது. இது கூட்டாட்சி முறைக்கு பொருத்தமற்றது. நாடாளுமன்ற கூட்டத் தொடரில் இந்த விவகாரம் எழுப்பப்பட வேண்டும்.

மாநிலப் பட்டியலில் உள்ள விவசாயம் தொடர்பான நான்கு முக்கியமான சட்டங்களை ஒன்றிய அரசு மாநிலத்துடன் கலந்து ஆலோசிக்காமல் நிறைவேற்றியுள்ளது. எனவே கூட்டாட்சிக்கு பொருந்தாத சட்டங்களை எதிர்ந்து நிற்கவேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமன்றி, மாநில அமைச்சர்கள் மற்றும் தலைமை செயலாளர் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.

Also Read: “பழங்குடியினருக்காகப் போராடினாலே அவர்கள் மாவோயிஸ்ட்டுகளா?”: மோடி அரசை வெளுத்து வாங்கிய முரசொலி தலையங்கம்!