India

“பெட்ரோல் விலை உயர்ந்தால் என்ன.. சைக்கிளில் செல்லுங்கள்” : ம.பி பா.ஜ.க அமைச்சர் கிண்டல் பேச்சு !

அண்டை நாடுகளான பாகிஸ்தானில் ஒரு லிட்டர் பெட்ரோல் 51 ரூபாய்க்கும், இலங்கையில் 59 ரூபாய்க்கும் விற்கப்படும் நிலையில், இந்தியாவிலோ 100 ரூபாயைத் தாண்டி, 109 ரூபாய் வரை விற்கப்பட்டு வருகிறது. டீசல் விலையும் 100 ரூபாயைத் தாண்டி விட்டது.

இந்த கட்டுக்கடங்காத விலை உயர்வை ஏற்க முடியாது என்று, இடதுசாரிகள், காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் போராட்டம் நடத்தி வருகின்றன. பெட்ரோல் - டீசல் விலையில் சுமார் 60 சதவிகிதம் அளவிற்கு உள்ள கலால் வரியைகுறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றன.

ஆனால், மோடி அரசு அதனை கேட்பதாக இல்லை. இந்நிலையில்தான், பெட்ரோல் டீசல் விலை உயர்வு குறித்து, செய்தியாளர்களிடம் பேசிய மத்தியப் பிரதேச பா.ஜ.க அமைச்சர் பிரதுமான் சிங் தோமர், பெட்ரோல் விலை உயர்ந்தால் என்ன, சைக்கிளில் செல்லுங்கள்.

காய்கறி மார்கெட் போன்ற அருகில் உள்ள இடங்களுக்கு சைக்கிளில் செல்வது நல்லது. அது உடலுக்கு ஆரோக்கியம் தருவதோடு சுற்றுப்புறச் சூழல் தூய்மையையும் உறுதி செய்கிறது” என்று அவர் மக்களின் வேதனையைக் கிண்டலடித்துள்ளார்.

மேலும், “பெட்ரோல், டீசல் விலை உயர்வு மூலம் அரசுக்கு கிடைக்கும் வருவாய் ஏழை - எளிய மக்களுக்கான நலத் திட்டங்களுக்குத்தான் பயன்படுத்தப்படுகிறது” என்று கூறியிருக்கும் அவர், “பெட்ரோல் - டீசல் விலை முக்கியமா, அல்லது நாட்டின் சுகாதார சேவை சிறப்பாக இருப்பது முக்கியமா?” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரதுமான் சிங் தோமரின் இந்த பேச்சு அடங்கிய வீடியோ சமூகவலைதளங்களில் வெளியான நிலையில், பல்வேறு தரப்பினரும் அமைச்சருக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். அமைச்சர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையும் அங்கு எழுந்துள்ளது.

Also Read: “கல்விக் கட்டணம் செலுத்த முடியாவிட்டால் எதற்கு உயிரோடு இருக்கிறீர்கள்?” : பா.ஜ.க அமைச்சர் சர்ச்சை பேச்சு!