India

“கொரோனாவால் பாதித்த துறைகளுக்கு ரூ.1.1 கோடி கடன்” : உத்தரவாத கடன்களை அறிவித்த ஒன்றிய நிதியமைச்சர்!

இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. மேலும் கடுமையான நிதி நெருக்கடியையும் கொரோனா ஏற்படுத்தியுள்ளது. இதனால் பல நிறுவனங்கள் மூடப்பட்டு லட்சக்கணக்கானோர் வேலை இழந்துள்ளனர். மேலும் வரலாறு காணாத வகையில் நாட்டின் பொருளாதாரம் கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தொடர்ந்து சரிவடைந்து வருகிறது.

இதனிடைய பொருளாதாரத்தை மீட்க சரியான முடிவுகளை ஒன்றிய அரசு எடுத்து மக்களை பாதுகாக்க வேண்டும் தொடர்ச்சியாக எதிர்க்கட்சிகள் பல்வேறு ஆலோசனைகளையும், கோரிக்களையும் முன்வைத்து வந்தன.

இந்நிலையில், ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கொரோனாவால் பாதிக்கப்பட்ட துறைகளுக்கு ரூபாய் 1.1 லட்சம் கோடி கடனுக்கு உத்தரவாதம் அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

டெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள துறைகளுக்கு ரூ.1.1 லட்சம் கோடி கடனுக்கு உத்தரவாதம் அளிக்கப்படும். மேலும் மருத்துவமனைகளில் மருத்துவ உட்கட்டமைப்பு வசதிகளை அமைக்க ரூ.100 கோடிவரை கடன் வழங்கப்படும்.

சுகாதார உட்கட்டமைப்புக்கு மட்டும் ரூ.50 ஆயிரம் கோடி கடனுக்கு உத்தரவாதமும், மருத்துவமனைகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை அமைக்க ரூ.100 கோடி வரை கடனும் வழங்கப்படும். 7.95% வட்டியில் மூன்றாண்டுகளுக்கு இந்த கடன் வசதி அமலில் இருக்கும்.

பிற துறைகளுக்கான கடனுக்கு வட்டி 8.25 %இருக்கும். மற்ற துறைகளுக்கு ரூ.60 ஆயிரம் கோடி கடன் உத்தரவாதம் அளிக்கப்படும். அவசரகால கடன் வசதியாக தொழில்துறையைச் சேர்ந்தவர்களுக்கு ரூ.1.5 லட்சம் கோடி வழங்கப்படும். அரசு உத்தரவாதத்துடன் வங்கிகள் மூலம் தொழில்துறைக்குக் கடனுதவி வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

சுற்றுலாத்துறையை ஊக்குவிக்க சுற்றுலா பயணிகளுக்கு சலுகை அளிக்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது.அதன்படி ஐந்து லட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு இலவச விசா அளிக்கப்படும்" என தெரிவித்துள்ளார்.

Also Read: “எடப்பாடி பழனிசாமி செய்த துரோகத்தை 1000 அறிக்கைகள் விட்டாலும் மறைக்க முடியாது” : கே.எஸ்.அழகிரி விளாசல்!