India

“வழக்கறிஞர்களை முன்கள பணியாளர்களாக அறிவிக்க வேண்டும்”: ஒன்றிய அரசுக்கு தலைமை நீதிபதி ரமணா கோரிக்கை!

முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.வி.ரவீந்திரன் எழுதிய 'சட்டம் மற்றும் நீதியில் முரண்பாடுகள்' நூல் வெளியீட்டு விழா இணைய வழியில் நடைபெற்றது. இதில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா பங்கேற்று நூலை வெளியிட்டார்.

பின்னர் தலைமை நீதிபதி ரமணா பேசுகையில், "கிராமப்புறங்கள் மற்றும் தொலைதூர பகுதிகள், மலைப்பகுதிகளில் மோசமான இணைய வசதி இருப்பதால், நீதி வழங்குவதின் வேகத்தைப் பாதிக்கிறது. எனவே இந்த பிரச்சனைக்கு ஒன்றிய அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும். இது தொடர்பாக ஒன்றிய சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்திற்குக் கடிதம் எழுதி அனுப்பியுள்ளேன்.

அதேபோல், கொரோனா தொற்றால் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான இளம் வழக்கறிஞர்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். எனவே வழக்கறிஞர்களுக்கு நிதி உதவி வழங்க வேண்டும். மேலும் இணையப் பிரச்சனையால் அனைத்து தலைமுறை வழக்கறிஞர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சட்ட தொழில் மற்றும் அதனுடன் தொடர்புடைய பணியாளர்களை முன்கள பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் மற்றும் வழக்கறிஞர்களுக்கு முன்னுரிமை அளித்து தடுப்பூசி போட வேண்டும்"என கூறினார்.

Also Read: ‘ஒன்றியம்’ என்ற சொல்லை எதிர்ப்பது; குன்றிய அறிவின் வெளிப்பாடே - முரசொலியில் ‘சிலந்தி’ கட்டுரை!