India

மாடுகளைக் கடத்துவதாக கூறி ஒருவரை அடித்துக் கொலை : இந்துத்துவா கும்பலின் வெறிச்செயல்!

மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து பா.ஜ.க ஆளும் மாநிலங்களான மத்திய பிரதேசம், குஜராத், உத்தர பிரதேசத்தில் மாட்டிறைச்சி உண்பவர்கள் மீதும், மாடுகளை ஏற்றிச் செல்பவர்கள் மீதும் இந்துதுவா அமைப்பைச் சேர்த்தவர்கள் தாக்குதல் நடத்தி கொலை செய்யும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன.

மத்திய பிரதேச மாநிலம், அச்சல்பூரைச் சேர்ந்த பாபு லால் மற்றும் பிந்து ஆகிய இரண்டு பேர் வாகனம் ஒன்றில் மாடுகளை ஏற்றிக்கொண்டு, ராஜஸ்தான் மாநிலம், பெகுன் என்ற இடத்திற்கு வந்துள்ளனர்.

அப்போது, இந்துத்துவா கும்பல் ஒன்று அவர்கள் மாடுகளைக் கடத்தி செல்வதாகக் குற்றம்சாட்டி அவர்களை வழிமறித்துள்ளது. பின்னர் அந்த கும்பல் இவர்கள் இருவர் மீதும் கொடூரமாகத் தாக்கி, அவர்களிடமிருந்த ஆவணங்களையும், செல்போன்களையும் பறித்துள்ளது.

இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலிஸ் வருவதைப் பார்த்த இந்த கும்பல் உடனே அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. பின்னர் போலிஸார் அங்கு வந்து பார்த்தபோது இருவரும் பலத்த காயத்துடன் இருந்துள்ளனர். பிறகு அவர்களை மீட்ட போலிஸார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அப்போது, செல்லும் வழியிலேயே இந்துத்துவா கும்பல் தாக்கியதில் பாபு லால் என்பர் உயிரிழந்தார். பிந்துவுக்கு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும், இவர்களைத் தாக்கியவர்கள் குறித்தும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Also Read: டேராடூன் விரைந்த சி.பி.சி.ஐ.டி தனிப்படை போலிஸார்.. பாலியல் புகாரில் சிக்கிய சிவசங்கர் பாபா கைது?