India

“ஜூன் 21 முதல் மாநிலங்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்கப்படும்"- பிரதமர் மோடி உரையின் முழு விபரம்..!

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை மக்களை கடுமையாக பாதித்து வரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் தொலைக்காட்சி வாயிலாக உரையாற்றினார்.

அப்போது பிரதமர் மோடி பேசுகையில், “இந்தியா மட்டுமல்லாது, உலகின் பல நாடுகளும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளன. நவீன உலகம் கொரோனாவை போன்று ஒரு பெருந்தொற்றை கண்டதே இல்லை.

கொரோனா இரண்டாவது அலையில் நமது உறவுகள் பலரை நாம் இழந்துள்ளோம்; கொரோனாவுக்கு எதிராக இந்தியா வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த போரை மேற்கொண்டுள்ளது.

கொரோனாவைத் தொடர்ந்து புதிய சுகாதார கட்டமைப்பை இந்தியா உருவாக்கியுள்ளது. கொரோனா சிகிச்சைக்கான மருந்து உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல்-மே மாதங்களில் மருத்துவ ஆக்சிஜன் தேவை கற்பனை செய்ய முடியாத அளவுக்கு அதிகரித்தது. ஆக்சிஜன் வசதியை போர்க்கால அடிப்படையில் அதிகரித்து சாதித்துள்ளோம்.

கொரோனாவை கட்டுப்படுத்த முகக்கவசம், தனி மனித இடைவெளி முக்கியம். இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் வேகம் இருமடங்கு அதிகரித்துள்ளது.

தடுப்பூசி மட்டுமே கொரோனாவை தடுக்கும் பேராயுதம். இந்தியாவின் கோவாக்சின் ஒரு உயிர் காக்கும் மருந்தாக அமைந்துள்ளது.

உள்நாட்டில் தடுப்பூசி தயாரிக்காவிட்டால் நாம் என்ன செய்திருக்க முடியும்? முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்காவிட்டால் என்ன நடந்திருக்கும்?

மேலும் 3 தடுப்பூசிகள் தற்போது சோதனை கட்டத்தில் உள்ளன. தடுப்பூசி பணிகளை துரிதப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மூக்கில் சொட்டு மருந்தாக செலுத்தும் வகையிலான தடுப்பு மருந்து விரைவில் வரும்.

கொரோனா பரவல் அதிகரித்து வந்ததால் தடுப்பூசி போடும் பணிகள் பாதிக்கப்பட்டன. சில நிறுவனங்கள் மட்டுமே தடுப்பூசி தயாரிக்கும் பணிகள் மேற்கொண்டு வருகின்றன. நாட்டு மக்களுக்கு இதுவரை 24 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

ஜூன் 21ம் தேதி முதல் மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு இலவசமாக தடுப்பூசி வழங்கும். மாநிலங்களின் கோரிக்கையை ஏற்று முற்றிலும் இலவசமாக தடுப்பூசிகள் வழங்கப்படும். கொரோனா தடுப்பூசிகளுக்காக மாநிலங்கள் தங்களது நிதியிலிருந்து செலவிட தேவையில்லை. தடுப்பூசி பற்றாக்குறை நாடு முழுக்க விரைவில் தீர்ந்துவிடும்.

நாட்டு மக்கள் அனைவருக்கும் இலவசமாகவே கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும். எனினும் தனியார் மருத்துவமனைகள் மூலம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள விரும்பினால் அதற்கும் அனுமதி வழங்கப்படும்.

தடுப்பூசி மூலம் பல லட்சகணக்கான உயிர்களைக் காப்பாற்றியிருக்கிறோம். தடுப்பூசி மீது மக்கள் அனைவருக்கும் நம்பிக்கை வரும் வகையில் அனைவரும் செயலாற்ற வேண்டும்.

கரீப் கல்யாண் திட்டத்தின் கீழ் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு தானியங்கள் இலவசமாக வழங்கும் திட்டம் தீபாவளி வரை தொடரும்.” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “மூக்கில் சொட்டு மருந்தாக செலுத்தும் வகையிலான தடுப்பு மருந்து விரைவில் வரும்” - பிரதமர் மோடி உரை!