India

விதியை மீறியதாகச் சொல்லி போலிஸார் தாக்கியதில் சிறுவன் பலி; உ.பியில் நடந்த ‘லாக்கப் டெத்’ !

கொரோனா வைரஸ் இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருவதை அடுத்து இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், உத்தர பிரதேச மாநிலத்திலும் ஊரடங்கு விதிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது.

உத்தர பிரதேச மாநிலம், உன்னாவ் பகுதியைச் சேர்ந்த சிறுவன் முகமது ஃபைசல். இந்த சிறுவன் தனது வீட்டின் முன்பாக காய்கறி விற்று வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று போலிஸார் விஜய் சௌத்ரி, சத்ய பிரகாஷ் ஆகிய இருவர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது வீட்டின் முன்பு முகமது ஃபைசல் காய்கறிகளை விற்றுக் கொண்டிருந்தார். ஊரடங்கு வீதிகளை மீறியதாகக் கூறி சிறுவனை போலிஸார் காவல் நிலையம் அழைத்துச் சென்று கொடூரமாக அடித்துள்ளனர்.

இதில் காயமடைந்த சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

இது பற்றி தகவல் அறிந்த சிறுவனின் உறவினர்கள் மற்றும் ஊர்மக்கள் காவல் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து இரண்டு போலிஸாரையும் உயர் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்துள்ளனர்.

Also Read: “3வது அலையை நாங்கள் எதிர்பார்க்கவில்லை எனக் கூறி மோடி அரசு தப்பிக்க முடியாது” : ப.சிதம்பரம் எச்சரிக்கை!