India

“தற்போதைய தடுப்பூசி விலை நியாயமானதுதான்” : உச்சநீதிமன்றத்தில் அதிர்ச்சிகரமான வாதத்தை முன்வைத்த மோடி அரசு!

கொரோனா இரண்டாவது அலை இந்தியாவில் தீவிரமாக பரவி வரும் சூழலில், தடுப்பூசிக்கான அதிக விலை நிர்ணயம் குறித்து உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்துள்ள ஒன்றிய அரசு தடுப்பூசி விலைகளை நியாயப்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மத்தியில் அரசு அதிர்ச்சிகரமான வாதங்களைப் பிரமாணப் பத்திரத்தில் முன்வைத்துள்ளது. அதில், இந்தியாவில் ஐ.சி.எம்.ஆருடன் இணைந்து நடத்திய தடுப்பூசி ஆய்வுக்கு எந்த மானியமும் அரசு வழங்கவில்லை. மனிதர்களிடம் சோதனை நடத்த மட்டுமே ஐ.சி.எம்.ஆர் 46 கோடி ரூபாய் செல்விட்டுள்ளது.

தடுப்பூசி உற்பத்திக்கு மட்டுமே முதல்கட்ட நிதி உதவியாக சீரம் நிறுவனத்துக்கு 1732 கோடியும், பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு 787 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்கள் நிர்ணயித்துள்ள விலை நியாயமானதுதான். இது ஆரோக்கியமான சந்தைப் போட்டியை உருவாக்க ஊக்கமளிக்கும். கூடுதல் வெளிநாட்டு தடுப்பூசிகள் இந்தியாவில் விற்பனைக்கு வரவும் இது உதவியாக இருக்கும் என்ற அதிர்ச்சிகரமான வாதத்தை முன்வைத்துள்ளது.

மத்திய அரசு தலையிட்டு விலை குறைத்தால் எதிர்பாராத பின்விளைவுகள் ஏற்படாலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், மாநில அரசுகள் விலை கொடுத்து வாங்கி மக்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடுவதால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. எனவே இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிடக் கூடாது என்று கூறியுள்ளது. இந்த நிலையில், வழக்கு மீண்டும் நாளை மறுநாள் விசாரணைக்கு வரவுள்ளது.

Also Read: “முன்னாள் முதல்வர் மீது பா.ஜ.க-வினர் தாக்குதல்” : திரிபுராவில் கலவரத்தை தூண்டி விடும் மோடி அரசு!