India

“புயல் வேகத்தில் தாக்குகிறது கொரோனா இரண்டாம் அலை... ஆக்சிஜன் தேவை அதிகரிப்பு” - பிரதமர் மோடி உரை!

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தொற்று தீவிரமடைந்துள்ளது. கடந்த சில நாட்களாகவே இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 2 லட்சத்தைத் தாண்டி பதிவாகி வருகிறது.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தொலைக்காட்சியில் பேசிவரும் பிரதமர் மோடி, “கொரோனாவால் உயிர் இழந்த அனைவரின் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். நான் உங்கள் குடும்பத்தில் ஒருவனாக துக்கத்தில் பங்கேற்கிறேன்.

கொரோனா நோய் தடுப்புப் பணிகளில் ஈடுபடும் முன்களப் பணியாளர்கள், சுகாதார பணியாளர்களுக்கு பாராட்டுகள். புயல் வேகத்தில் கொரோனா இரண்டாம் அலை நம்மைத் தாக்குகிறது.

நாட்டு மக்கள் அனைவரும் நினைத்தால் கொரோனாவை முறியடிக்க இயலும் என நம்புகிறேன்; தற்போதைய கொரோனா பாதிப்பில் இருந்து நம்மால் மீண்டுவர முடியும். சிக்கலான நேரத்தில் நாம் அனைவரும் பொறுமை இழக்காமல் இருக்கவேண்டும்.

மருத்துவ நிபுணர்களின் தொடர் உழைப்பால் கடந்தாண்டு இறுதியில் தடுப்பூசி கிடைத்தது. இவர்களின் அசாதரண உழைப்பால் 2 தடுப்பூசி மருந்துகளை இந்தியா தயாரித்தது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது. ஆக்சிஜன் தேவையைப் பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.” எனப் பேசியுள்ளார்.

Also Read: தமிழகத்தில் உச்சகட்ட பரவல்: இன்று 10,986 பேருக்கு கொரோனா தொற்று... ஒரே நாளில் 48 பேர் பலி! #CovidUpdates