India

“அலட்சியத்தின் உச்சம்..கடந்த 15 நாளில் 51 அரசு ஆசிரியர்கள் கொரோனாவால் பலி”: பா.ஜ.க ஆளும் ம.பி-யில் அவலம்!

நாடுமுழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸைக் கட்டுப்படும் நோக்கில் சுகாதாரத்துறை பல்வேறு கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதேவேளையில், நாடுமுழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் முடுக்கிவிட்டப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறி வருகிறது.

ஆனால் மகாராஷ்டிரா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்படுத்துள்ளதாக அம்மாநில அரசுகள் குற்றம்சாட்டி வருகின்றன. அதுமட்டுமல்லாது பா.ஜ.க அரசு ஆட்சி செய்யும் மாநிலங்களில் கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்வதில் அம்மாநில அரசுகள் தோல்வி அடைந்துள்ளதாக பா.ஜ.கவின் மூத்த நிர்வாகிகளே புலம்பி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

குறிப்பாக, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் மற்றும் குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் பா.ஜ.க எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் கொரோனா தடுப்பு கட்டமைப்பு படும் மோசமாக இருந்து வருவதாக கூறிவருகின்றனர். இந்நிலையில், மத்திய பிரதேசத்தில் கடந்த 15 நாட்களில் 51 அரசு ஆசிரியர்கள் கொரோனாவுக்கு பலியாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக மத்திய பிரதேச அரசு ஆசிரியர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 15 நாட்களில் மட்டும் 51 அரசு ஆசிரியர்கள் கொரோனா தொற்றுக்கு பலியாகி இருப்பதாக கூறியுள்ளது. கொரோனாவுக்கு பலியான ஆசிரியர்களின் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களையும் பட்டியலாக வெளியிட்டுள்ளது.

மத்திய பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டத்தில் மட்டும் 28 ஆசிரியர்கள் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். தார் மாவட்டத்தில் 14 ஆசிரியர்கள், பீடல் மாவட்டத்தில் 6 ஆசிரியர்கள், சிவானி மாவட்டத்தில் 10 ஆசிரியர்கள் உயிரிழந்துள்ளனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில், ஆசிரியர்களின் உயிரிழப்புக்கு மாநிலத்தை ஆளும் பா.ஜ.க அரசின் அலட்சியம்தான் காரணம் என்றும் குற்றம்சாட்டியுள்ளனர். ஆசிரியர்களை வீட்டில் இருந்தே பணிபுரிய அனுமதிக்க வேண்டும் எனவும் அரசு ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

Also Read: ஹரித்வாரில் 2220 பேருக்கு தொற்று உறுதி: கொரோனா ஹாட்ஸ்பாட்டாக மாறிய கும்பமேளா - நிர்வாணி அகாரா தலைவர் பலி!