India

பரவும் கொரோனா 2வது அலை: மாணவர்களை வாட்டி வதைக்கும் மோடி அரசு - நீட் தேர்வை ஒத்திவைக்க வலுக்கும் கோரிக்கை!

நாடுமுழுவதும் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வை கட்டாயமாக்கியுள்ளது பா.ஜ.க அரசு. குறிப்பாக, கடுமையான எதிர்ப்புக்கும், சர்ச்சைகளுக்கும் இடையே எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்.. பி.ஏ.எம்.எஸ்., பி.எஸ்.எம்.எஸ்., பி.யு.எம்.எஸ்., பி.எச்.எம்.எஸ். போன்ற மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு நடத்தப்படுகிறது.

மாநில பாடத்திட்டத்தின் கீழ் படிக்கும் மாணவர்கள் தாய்மொழி வழியில் படிக்கும் மாணவர்கள் கிராமப்புற ஏழை, எளிய மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியை மறுக்கும் வகையிலேயே நீட் தேர்வு அமைந்துள்ளதாக தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

மேலும், இந்தத் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய போதும், மத்திய அரசு இதை கண்டுகொள்ள மறுக்கிறது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வால் பல உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன.

இந்நிலையில், மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு ஆகஸ்ட் 1ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘எம்.பி.பி.எஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான 2021ம் ஆண்டு நீட் தேர்வு, ஆகஸ்ட் 1ம் தேதி நடைபெறும்.

இந்த நுழைவுத்தேர்வு உரிய விதிமுறைகளுடனும், வழிகாட்டுதலுடனும் ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளபடி நடைபெறும். இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட 11 மொழிகளில் நடத்தப்படும் நீட் தேர்வில் பேனா, காகிதம் முறை தொடரும். தேர்வு தொடர்பான மற்ற தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும்” என கூறப்பட்டுள்ளது.

நாடும்ழுழுவதுமே கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருவதால், பள்ளி கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டது. இத்தகைய சூழலில், ஆகஸ்ட் மாதம் நீட்தேர்வை உறுதியாக நடத்தப்போவதாக மத்திய பா.ஜ.க அரசு அறிவித்துள்ளது மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து கொரோனா பரவலைக் கணக்கில் கொண்டு மோடி அரசு தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் மாணவர்கள் நலனில் அக்கறைக்காட்டாத மோடி அரசோ தற்போது வரை இதுகுறித்து எந்த முடிவையும் பரிசிலினை கூட செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: “யாரை திருப்தி செய்ய பெரியார் நெடுஞ்சாலையின் பெயர் மாற்றம்?”: எடப்பாடி அரசுக்கு கி.வீரமணி கடும் கண்டனம் !