India
“மோடி அரசால் மிகப்பெரிய பேரழிவை எதிர்நோக்கியிருக்கிறது இந்தியா” - ப.சிதம்பரம் எச்சரிக்கை!
பா.ஜ.க அரசின் பிடிவாதம் காரணமாக, மிகப்பெரிய பேரழிவு எதிர்நோக்கியிருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையால் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
ஆனால், கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருவதால், தடுப்பூசி செலுத்தும் முறையைப் போர்க்கால அடிப்படையில் வேகப்படுத்தி, மாற்றி அமைக்க வேண்டும் என்றும் 18 வயது நிரம்பிய அனைவரும் இலவசமாகத் தடுப்பூசியை கொரோனா தடுப்பூசி மையத்தில் செலுத்திக்கொள்ளும் வசதியை ஏற்படுத்த வேண்டும் என பிரதமர் மோடிக்கு இந்திய மருத்துவக் கூட்டமைப்பு ஆலோசனை வழங்கியது.
மேலும், “தடுப்பூசி செலுத்தும் பணியில் தனியார் மருத்துவமனை, சிறிய கிளினிக் போன்றவற்றையும் ஈடுபடுத்த வேண்டும். பொது நிகழ்ச்சிகளுக்கு வரும் மக்கள் கண்டிப்பாக தடுப்பூசி சான்றிதழைக் கொண்டு வருவதைக் கட்டாயமாக்க வேண்டும். தடுப்பூசி செலுத்துவதன் மூலம் தனிநபர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதுடன், தொற்று நோயின் தீவிரத்தைக் குறைக்கும் வகையில் மந்தத் தடுப்பாற்றலையும் ஏற்படுத்தும்” எனத் தெரிவித்திருந்தது.
ஆனால், மத்திய பா.ஜ.க அரசு முன்னுரிமை அடிப்படையில் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளது. இதனால், பரவலைக் கட்டுப்படுத்த முடியாமல் மாநில அரசுகள் விழிபிதுங்கி உள்ளன.
இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும் எம்.பி.,யுமான ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “18 வயது நிரம்பிய அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று இந்திய மருத்துவ அமைப்பு ஆலோசனை வழங்கியுள்ளது. பல்வேறு மாநில முதல்வர்களும், இதே கருத்தைத்தான் வலியுறுத்தியுள்ளனர்.
ஆனால், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி தேவையில்லை என்று மத்திய அரசு கூறுகிறது. எந்தவிதமான முன்பதிவும் இன்றி அனைத்து வயதினருக்கும் இலவசமாகத் தடுப்பூசி செலுத்த வேண்டிய அவசியமான நேரம் இது.
அறிவியல்பூர்வமற்ற மற்றும் பிடிவாதமான நிலைப்பாடு காரணமாக, ஒவ்வொரு நாளும் பல்வேறு நோய்த் தொற்று உருவாக மத்திய அரசு அனுமதித்து வருகிறது. மிகப்பெரிய பேரழிவை நம் நாடு எதிர்நோக்கிக் காத்திருக்கிறது.
மோடி அரசைப் போல் உலகில் எந்த ஜனநாயக அரசும், இதுபோல் கொடூரமாக, உணர்வற்று இருந்தது இல்லை. பண மதிப்பிழப்பு நடவடிக்கை முதல், தடுப்பூசி முகாம் வரை, மோடி அரசின் தவறான கொள்கைகளால், மக்கள் மிகப்பெரிய விலை கொடுத்து வருகிறார்கள்.” எனச் சாடியுள்ளார்.
Also Read
-
“கல்வி இருந்தால் வாழ்க்கையே மாறும்” : நடிகர் நடிகர் கார்த்தி பேச்சு!
-
“மாணவர்களின் முன்னேற்றத்திற்கு உழைக்கும் அரசு” : நடிகர் விஜய் சேதுபதி பாராட்டு!
-
“கல்வியே திராவிட மாடல் அரசின் மூலதனம்” : 'உலகம் உங்கள் கையில்' விழாவில் நடிகர் மணிகண்டன் பேச்சு!
-
“உலகம் உங்கள் கையில்” : மாணவர்களுக்கு டிக்கணினிகள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!
-
உலகம் உங்கள் கையில் : மாணவர்களுக்காக 40 அரங்குகளுடன் தொழில்நுட்பக் கண்காட்சி தொடக்கம்.. எங்கு? - விவரம்!