India

மிரட்டும் கொரோனோ.. மீண்டும் கட்டாயம் ஊரடங்கு தேவை : மத்திய - மாநில அரசுகளை அறிவுறுத்தும் எய்ம்ஸ் !

இந்தியாவில் கடந்த ஒருமாதமாக கொரோனா வைரஸ் 2வது அலை கிடுகிடுவென உயர்ந்துவருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 558 பேருக்கு கொரோனா தொற்று எண்ணிக்கை பதிவாகியுள்ளது.

இதனால் உலகளவில் பதிவாகும் தினசரி கொரோனா எண்ணிக்கையில் இந்தியா முதலிடத்தைப் பெற்றுள்ளது மக்களை பெரிது அச்சமடையச் செய்துள்ளது. அதேபோல், மகாராஷ்டிரா மாநிலத்தில் 57 ஆயிரத்து 74 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இம்மாநிலத்தில், கொரோனா வேகமாகப் பரவி வருவதால் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் திரையரங்குகள், வணிக வளாகங்கள் போன்றவைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், கர்நாடகா, சத்தீஸ்கர், டெல்லி, தமிழ்நாடு, உத்திரபிரதேசம், பஞ்சாப், மத்தியப்பிரதேசம் ஆகிய 7 மாநிலங்களிலும் கொரோனா பரவல் அதிகரித்து வருவது மத்திய, மாநில அரசுகளை கவலையளிக்கவைத்துள்ளது.

இந்நிலையில், இந்தியாவில், கொரோனா வைரஸ் 2வது அலை அதிகரித்து வருவதால், மக்களைப் பாதுகாக்கக் கட்டாயம் சிறிய அளவிலான ஊரடங்கு அவசியம் என டெல்லி அகில இந்திய மருத்துவ மையத்தின் (எய்ம்ஸ்) தலைமை மருத்துவர் ரந்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், இந்தியாவில், கடந்த ஆண்டு செப்டம்பரிலிருந்து இதுவரை இல்லாத அளவுக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகி வருவது கவலையளிக்கிறது. இப்போது சமூக தொற்றாக இது பரவி வருகிறது. எனவே கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த வேண்டியது மிகவும் அவசியம்.

அதேபோல், கொரோனா தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்த பெருமளவிலான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். ஆனால், இந்த நடவடிக்கை மட்டும் கொரோனாவை கட்டுப்படுத்திவிடாது. எனவே சிறிய அளவிலான ஊரடங்கு அமல்படுத்தினால், நோய் பரவலைக்கட்டுப்படுத்த முடியும்” என தெரிவித்துள்ளார்.

Also Read: “ ‘பெரியாரிசத்தை ஒழிப்பேன்’ என்ற பா.ஜ.க நிர்வாகியை அ.தி.மு.க ஏன் கண்டிக்கவில்லை?” : ப.சிதம்பரம் ஆவேசம் !