India

கடைசி நேரத்தில் இணையதளத்தில் கோளாறு : ஆதார், பான் இணைப்புக்கு கால அவகாசத்தை நீட்டித்த மோடி அரசு!

மோடி தலைமையிலான மத்திய அரசு தனிமனித அடையாளம் என கூறி ஆதாரை கொண்டுவந்து, அனைத்து விஷயங்களுக்கும் ஆதார் கட்டாயமாக்கியது. அந்த வகையில், கடந்த 2017ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மத்திய அரசு அறிக்கை வெளியிட்டது.

மத்திய அரசின் இந்த அறிவிப்பு பொதுமக்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் ஆதார்-பான் இணைப்புக்கான அவகாசம் மத்திய அரசு நீட்டியது. மேலும் குடிமக்களுக்கு ஆதார் அட்டை வழங்குவதற்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் வருமான வரி செலுத்துவதற்கு ஆதார் எண் கட்டாயம் என்றும் தீர்ப்பளித்தது.

இதனால், பான் கார்டு வைத்திருக்கும் அனைவரும் தங்களது பான் எண்-ஐ ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என மத்திய அரசு திட்டவட்டமாக அறிவித்தது. ஆதார், பான் கார்டு இணைப்பில் பல்வேறு குளறுபடிகள் வந்ததால், பல முறை ஆதார் பான் இணைப்பிற்கான கால அவகாசத்தை மத்திய அரசு நீட்டிப்பு செய்துவந்தது.

பின்னர், கடந்த ஆண்டின் ஜூன் மாதம் மத்திய அரசு வெளியிட்டிருந்த அறிவிப்பில் பான் கார்டை ஆதாருடன் இணைப்பதற்கான கால அவகாசம் 2021 மார்ச் 31 வரையில் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும் மார்ச் 31ம் தேதிக்குள் ஆதார் - பான் எண் இணைக்காவிட்டால் பான் கார்டு செல்லாது என்றும், ரூபாய் ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றும், வங்கி கணக்குகள் முடங்கி விடப்படும் என மக்களை அச்சுறுத்தியது மத்திய அரசு.

இதனால், நேற்ற கடைசி நாள் என்பதால் பொதுமக்கள் பலரும் ஆதாருடன் பான் எண்ணை இணைக்க முயன்றனர். ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் முயற்சி செய்ததால், வருமான வரி இணையதளம் முடங்கியது. இதையடுத்து, கொரோனா பரவலை கருத்தில் கொண்டு, ஆதார்-பான் எண் இணைக்க ஜூன் 30ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்படுவதாக மத்திய அரசு நேற்று மாலை அறிவித்தது.

மத்திய அரசு ஆதார் - பான் எண் இணைப்பதில் தொடர்ந்து குளறுபடி செய்துவருவது மக்கள் மத்தியில் குழப்பத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது..

Also Read: இரவில் அறிவிப்பு, காலையில் வாபஸ் : துக்ளக் தர்பாரையும் மிஞ்சி கோமாளித்தனம் செய்யும் மோடி அரசு!