India

பழச்சாறில் மதுவை கலந்துகொடுத்து பாலியல் வல்லுறவு... இளம்பெண்ணை சிதைத்து, மிரட்டிவந்த பா.ஜ.க நிர்வாகி!

மத்தியில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பின்னர் நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளன. பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடும் பா.ஜ.க-வினரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க இளைஞர் அமைப்பான யுவா மோர்ச்சாவின் மண்டல தலைவர் ராஜேஷ் ஸ்ரீவஸ்தவா, பழச்சாறில் மதுவைக் கலந்து கொடுத்து இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரை சேர்ந்த பா.ஜ.க யுவா மோர்ச்சா மண்டல தலைவர் அதியாகஷ் என்ற ராஜேஷ் ஸ்ரீவஸ்தவா மீது இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ளார். அதன் பேரில் ராஜேஷ் ஸ்ரீவஸ்தவா மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து போலிஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், “புகார் அளித்த பெண் ராஜேஷ் ஸ்ரீவஸ்தவா உடன் நட்பாகப் பழகியுள்ளார். அதனை வாய்ப்பாக பயன்படுத்தி, அந்த பெண்ணுக்கு பழச்சாறில் மதுவை கலந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும், அதனை வீடியோவாக பதிவு செய்துள்ளார்.

கடந்தாண்டு செப்டம்பரில் இந்த சம்பவம் நடந்த நிலையில், அடிக்கடி அந்த பெண்ணை தொடர்பு கொண்டு தன்னுடைய வீட்டிற்கு வருமாறு ராஜேஷ் ஸ்ரீவஸ்தவா கட்டாயப்படுத்தியுள்ளார். அதற்கு அந்தப் பெண் மறுத்ததால், அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். மேலும், ரூபாய் 10 லட்சம் பணம் தரவில்லையென்றால் அவரது கணவருக்கு வீடியோக்களை அனுப்பிவிடுவேன் என மிரட்டியுள்ளார்.

அந்தப் பெண் மிரட்டலுக்கு பணியாத நிலையில், அவரது கணவருக்கு வீடியோ, புகைப்படங்களை ராஜேஷ் அனுப்பியுள்ளார். அதன் பின்னர்தான் அந்தப் பெண்ணின் கணவர், பாதிக்கப்பட்ட பெண்ணுடன் காவல் நிலையம் வந்து புகார் அளித்தார்.

இதையடுத்து விசாரணை நடத்தப்பட்டு ராஜேஷ் வஸ்தவ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள பா.ஜ.க நிர்வாகி ராஜேஷ் வஸ்தவ்வை தேடி வருகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “10 வருஷமா என்ன செஞ்சீங்க?” : ஆத்திரத்தில் ஓ.பன்னீர்செல்வம் மீது சாணம் வீசிய அ.தி.மு.க தொண்டர்!