India
கட்டுக்குள் வராத கொரோனா.. ஊரடங்குக்கு தயாராகும் மகாராஷ்டிரா.. என்ன செய்யக் காத்திருக்கிறது மோடி அரசு?
இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் வேகமாகப் பரவியதை அடுத்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பிறகு கொரோனா தாக்கம் சற்று குறைந்ததால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில் ஒரு வருடம் கழித்து மீண்டும் அதே மார்ச் மாதத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் வெகுவாக அதிகரித்துள்ளது. இதனால் மீண்டும் ஊரடங்கு அமலாகுமோ என மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இந்தியாவில் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 1.5 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 68,020 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்படி தினம் தினம் புதிய உச்சத்தை கொரோனா வைரஸ் தொடுவது மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
அதிலும், மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் மிக மோசமாக இருக்கிறது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 40 ஆயிரத்து 144 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 108 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக மாநில அரசு எடுக்கும் முடிவுகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிகிறது. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே தவித்து வருகிறார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் இதே நிலை தொடர்ந்தால் முழு ஊரடங்கை அமல்படுத்துவது தவிர வேறு வழியில்லை என முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "மக்களுக்கு எவ்வளவோ அறிவுரை கூறியும் அவர்கள் தொடர்ந்து அரசின் உத்தரவுகளை அலட்சியம் செய்து வருகின்றனர். பொது இடங்களில் பலர் முகக் கவசம் அணியாமல் இருக்கின்றனர். இதே நிலை தொடர்ந்து நீடித்தால் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்துவதைத் தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை.
முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டால் தொழிலாளர்கள் பலர் பாதிக்கப்படுவர். மேலும் மாநிலத்தின் ஏற்றுமதி குறையும். ஆனால் அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமான மகாராஷ்டிராவில் மக்களின் நன்மை கருதி இதனைச் செய்ய வேண்டியிருக்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.
மகராஷ்டிரா மாநிலத்தைப் போலவே, குஜராத், தமிழ்நாடு, பஞ்சாப், கேரளா கர்நாடகா போன்ற மாநிலங்களிலும் கொரோனா தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது. இந்தியா முழுவதுமே கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்திருக்கிறது. ஆனால், இது குறித்து கவலைப்படாமல், பிரதமர் நரேந்திர மோடி வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் சென்றுவருகிறார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வரும் நிலையில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தினால் இந்தியா தாங்காது என ரிசர்வ் வங்கி எச்சரிக்கை செய்துள்ள நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்த மோடி அரசு என்ன செய்யப்போகிறது என சமூக ஆர்வலர்களும், அரசியல் விமர்சகர்களும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
Also Read
-
“நீதித்துறையின் மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்து வருகிறது” -முன்னாள் நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் வருத்தம்!
-
5வது மாடியில் இருந்து வீசப்பட்ட பேச்சிளம் குழந்தை... தாயை அதிரடியாக கைது செய்த போலீஸ் -விசாரணையில் பகீர்!
-
காணாமல் போன மோடி : காணவில்லை என சுவரொட்டி அடித்த மணிப்பூர் மக்கள்!
-
பிரசாரத்துக்கு சென்ற பாஜக வேட்பாளருக்கு எதிர்ப்பு: சம்பவ இடத்திலேயே விவசாயி பரிதாப பலி -குவியும் கண்டனம்!
-
“பெண்கள் என்றால் எதை வேண்டுமானாலும் பேசலாமா ?” - சவுக்கு மீடியா சங்கருக்கு மகளிர் காங்கிரஸ் கண்டனம் !