India

“கொரோனா ஊரடங்கு மற்றும் வேலையிழப்பால் காலியான குடும்பங்களின் சேமிப்பு” : மோடி ஆட்சியில் நிகழும் அவலம் !

இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்த நிலையில், எந்த ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் மத்திய பா.ஜ.க அரசு ஊரடங்கை அமல்படுத்தியது. இந்த ஊரடங்கால், லட்சக்கணக்கானோர் வேலையிழந்தனர். மேலும் பல நிறுவனங்கள், தங்களின் ஊழியர்களுக்கு ஊதிய குறைப்பு நடவடிக்கையிலும் இறக்கியது.

இதனால் குடும்ப செலவுகளுக்காகப் பலர் கடன்களை வாங்கினர். மேலும் பலர் வங்கியில் சேமித்து வைத்திருந்த பணத்தை வெளியில் எடுத்து செலவு செய்து வந்தனர். கொரோனா நெருக்கடி துயரங்கள் இன்னும் இருந்து கொண்டிருக்கும் நிலையில், கடந்தாண்டு ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான குடும்பங்களின் கடன் மற்றும் சேமிப்புகள் குறித்த ஆய்வறிக்கையை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.

இந்த ஆய்வறிக்கையில், கொரோனா ஊரடங்கால், குடும்பங்களின் கடன் அதிகரித்திருப்பதாக, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மேலும் இது நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார மதிப்பில் 37.1% ஆகும் என்று தெரிவித்துள்ளது. இதேபோல், வங்கியின் மக்களின் சேமிப்புகளும் குறைந்துள்ளதாகவும், அது ஒட்டுமொத்த பொருளாதார மதிப்பில் 10.4% ஆக இருப்பதாகவும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

பொது முடக்கம் காரணமாக, கோடிக்கணக்கானோர் வேலை இழந்ததும் ஊதியங்கள் குறைக்கப்பட்டதுமே இந்த நிலைக்குக் காரணம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதேபோன்று 2009ம் நிதி ஆண்டில் சர்வதேச பொருளாதார தேக்க நிலை ஏற்பட்டபோது சேமிப்பு அளவு 170 அடிப்படை புள்ளிகள் வரை அதிகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.