India

ஆட்சிக்கலைப்பில் பிஸியாக இருக்கும் மோடி அரசு... இந்தியாவில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா தொற்று!

சீனாவின் வூஹான் நகரில் பரவத் துவங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தாக்கம் கொடூரமாக இருந்தது. வைரஸ் பரவலைத் தடுக்க ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதையடுத்து கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்த நிலையில் படிப்படியாக ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில், மகராஷ்டிரா, கேரளா, தமிழ்நாடு, ஜம்மு, காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் இன்று ஒரே நாளில் 22 ஆயிரத்து 854 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டின் தினசரி பாதிப்பு எண்ணிக்கையிலேயே இன்றுதான் அதிகம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால் மீண்டும் பழைய நிலைக்கு இந்தியா சென்றுவிடுமோ என மக்கள் அச்சடைந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனாவால் இதுவரை ஒரு கோடியே 12 லட்சத்து 85 ஆயிரத்து 561 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஒரு லட்சத்து 58 ஆயிரத்து 189 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேபோல், தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக 500க்கும் குறைவாக இருந்த பாதிப்பு எண்ணிக்கை நேற்று திடீரென 671 ஆக அதிகரித்துள்ளது. மேலும் சென்னையில் குறைந்து வந்த கொரோனா தொற்று, தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது.

தற்போது, மேற்குவங்கம், பஞ்சாப், கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

மேலும், மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு கொரோனா தடுப்பு பணியில் கவனம் செலுத்தாமல், எதிர்க்கட்சிகளின் ஆட்சியைக் கலைப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வருவதாக எதிர்க்கட்சிகளும், சமூக ஆர்வலர்களும் குற்றம்சாட்டியுள்ளனர்.

Also Read: “7 ஆண்டுகளில் கலால் வரி 459% உயர்த்தப்பட்டிருக்கிறது” - மத்திய பா.ஜ.க அமைச்சர் பரபரப்பு வாக்குமூலம்!