India

“ரயில்வே பிளாட்பார்ம் கட்டணம் 50 ரூபாயாக உயர்வு” : கட்டண உயர்வுக்கு கொரோனா மீது பழிபோடும் மோடி அரசு !

சீனாவின் வுகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியது. இதனால் கொரோனா வைரஸ் கட்டுக்குள் கொண்டு வர பல நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் ரயில் மற்றும் விமான போக்குவரத்துகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டன.

இந்நிலையில், இந்தியாவிலும் ரயில் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. பிறகு கொரோனாவின் தாக்கம் படிப்படியாகக் குறைந்ததை அடுத்து ஊரடங்கு தளர்த்தப்பட்டு, சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இன்னும் கொரோனாவிற்கு முந்தைய காலத்தில் இருந்ததைப் போல் ரயில் சேவை இன்னும் இயல்புநிலைக்கு வரவில்லை.

இதையடுத்து, பயணிகள் ரயில்களின் கட்டணத்தை திடீரென மத்திய அரசு உயர்த்தியது. இந்த திடீர் கட்டண உயர்வால், பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் வந்ததையடுத்து, கொரோனா பரவலை முன்னிட்டு, மக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்க்கவே இந்த கட்டண உயர்வு என வினோத விளக்கத்தை அளித்தது ரயில்வே அமைச்சகம்.

இந்நிலையில் ரயில்வே பிளாட்பார்ம் டிக்கெட்டுகளின் விலையும் நான்கு மடங்கு உயர்ந்துள்ளது. சில இடங்களில் 10 ரூபாயாக இருந்த பிளாட்பார்ம் டிக்கெட்டுகளின் விலை ரூபாய் 50 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கும் எதிர்ப்புகள் எழுந்ததை அடுத்து, இந்திய ரயில்வே அமைச்சகம் மீண்டும் கொரோனாவையே காரணம் காட்டியுள்ளது.

இந்நிலையில், சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, அரக்கோணம் மற்றும் காட்பாடி ரயில் நிலையங்களில் மட்டும், நேற்று முதல் பிளாட்பார்ம் டிக்கெட் வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே, டிக்கெட் கட்டணம் ஒரு பயணிக்கு ரூ.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இக்கட்டணம் ஓர் தற்காலிக நடவடிக்கை என்றும் பயணிகளின் பாதுகாப்புக்காகவும், ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசல் மூலம் கொரோனாவைரஸ் பரவாமல் தடுப்பதற்காகவும் ரயில்வே நிர்வாகம் மேற்கொண்டுள்ள நடவடிக்கை என்றும் தெரிவித்துள்ளது. மேலும் இந்த கட்டண உயர்வு மே 17-ம் தேதி வரை அமலில் இருக்கும் குறிப்பிட்டுள்ளனர்.

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலைகளை உயர்த்தியது போதாது என்று மறைமுகமாக ரயில் கட்டணத்தையும் உயர்த்தி, இதற்கு காரணம் கொரோனா வைரஸ்தான் என அதன் மீது பழியைப் போட்டுத் தப்பிக்கப் பார்க்கிறது பா.ஜ.க அரசு என சமூக ஆர்வலர்களும், எதிர்க்கட்சிகளும் குற்றம்சாட்டியுள்ளனர்.

Also Read: தேர்தல் காலங்களில் இந்தியவில் வெகுவாக அதிகரிக்கும் கொரோனா பரவல் : கொரோனா பாதிப்பு நிலவரம் ! #COVID19