India

மோடி அரசை தொடர்ந்து விமர்சிப்பதால் டாப்சி, அனுராக் காஷ்யப் மீது ரெய்டு ஆயுதத்தை ஏவிய பா.ஜ.க!

இயக்குநர் அனுராக் காஷ்யப், தயாரிப்பாளர் மது வர்மா, விகாஷ் பேல் ஆகியோர் இணைந்து கடந்த 2011ம் ஆண்டு 'பேன்டன்' என்ற பெயரில் சினிமா தயாரிப்பு மற்றும் டிஸ்டிரிப்யூஷன் நிறுவனத்தை நடத்திவந்தனர். இதையடுத்து, கடந்த 2018ம் ஆண்டு இந்த நிறுவனம் மூடப்பட்டுவிட்டது.

இந்நிலையில், வருமான வரி சரியாக செலுத்தவில்லை என புகார் வந்ததாக கூறி, நடிகை டாப்ஸி, இயக்குநர் அனுராக் காஷ்யப், தயாரிப்பாளர் மது வர்மா, விகாஷ் பேல் உள்ளிட்டோரின் வீடுகள் மற்றும் மும்பையில் இருக்கும் அலுவலகம் என 20க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

பா.ஜ.க அரசை தொடர்ந்து விமர்சித்து வருவோர் மீது வருமான வரித்துறை சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறதா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

முன்னதாக, விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பிரபல பாடகி ரிஹானா ட்விட் செய்திருந்தார். இதற்கு கிரிக்கெட் மற்றும் பாலிவுட் பிரபலங்கள் எதிர்ப்பு தெரிவித்து ட்விட் செய்தனர். அப்போது, நடிகை டாப்சி ரிஹானாவின் கருத்தை ஆதரிக்கும் விதமாக, "ஒரு ட்வீட் உங்கள் ஒற்றுமையைக் குலைக்கிறது, ஒரு நிகழ்ச்சி உங்கள் மத நம்பிக்கையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்றால் நீங்கள்தான் உங்களுடைய மதிப்பை வலுப்படுத்திக்கொள்ள வேண்டும், மற்றவர்களுக்குப் பிரச்சாரகர்களாக மாறக்கூடாது" எனப் பதிவிட்டார்.

மத்திய பா.ஜ.க அரசின் திட்டங்களைத் தொடர்ச்சியாக நடிகை டாப்சி விமர்சித்து வருகிறார். அதேபோல், இயக்குநரும், நடிகருமான அனுராக் காஷ்யப்பும் பா.ஜ.க மீது கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். இப்படி எதிர்க்குரல்களை நசுக்குவதற்காகவே மோடி அரசு வருமான வரித்துறையை ஏவிவிட்டுள்ளது என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

ஏற்கனவே, பா.ஜ.க அரசு தனது திட்டத்திற்கு எதிராகக் கருத்து தெரிவிப்பவர்கள் மீது ரெய்டு என்ற ஆயுதத்தைப் பயன்படுத்தி வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிவரும் நிலையில், நடிகர் டாப்சி, அனுராக் காஷ்யப் உள்ளிட்டோரின் வீடுகளில் ரெய்டு செய்திருப்பது இதனை நிரூபிக்கும் விதமாகவே அமைந்துள்ளது.

Also Read: "வன்கொடுமை செய்தவனே திருமணம் செய்வதா..? இது தீர்வா தண்டனையா..?" - தலைமை நீதிபதிக்கு நடிகை டாப்சி கண்டனம்!