India

"போராடும் விவசாயிகள் மீது அடக்குமுறை ஏவப்படுவது கவலையளிக்கிறது" - பா.ஜ.க அரசை விமர்சித்த மலாலா!

மத்திய பா.ஜ.க அரசு கொண்டுவந்துள்ள விவசாய விரோத வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி, டெல்லி எல்லைப் பகுதிகளில் 3 மாதங்களுக்கு மேலாக விவசாயிகள் தங்களின் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். விவசாயிகளின் இந்தப் போராட்டத்திற்கு, பிரபல பாடகி ரிஹானா, சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா தன்பர்க் உள்ளிட்ட உலக பிரபலங்கள் பலர் ஆதரவாகக் குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், "இந்தியாவில் விவசாயிகள் போராட்டம் ஒடுக்கப்படுவது கவலை அளிக்கிறது" என நோபல் பரிசு பெற்ற மலாலா யூசப்சாய் தெரிவித்துள்ளார். ஜெய்ப்பூரில் நடைபெற்ற இலக்கிய திருவிழாவில் உரையாற்றியபோது மலாலா இக்கருத்தை தெரிவித்துள்ளார்.

ஜெய்ப்பூரில் நடைபெற்ற இலக்கிய திருவிழாவில், மலாலா எழுதிய புத்தகம் குறித்த நிகழ்ச்சியில், காணொளிக்காட்சி மூலமாக மலாலா யூசப்சாய் கலந்து கொண்டு பேசுகையில், "இந்தியாவில் அமைதியாகப் போராட்டம் நடத்துவோர் மீது அடக்குமுறை ஏவப்படுவதும், இணையதளங்களை முடக்குவதும், சமூக ஆர்வலர்கள் கைது செய்யப்படுவது போன்ற நடவடிக்கைகள் கவலை அளிப்பதாக உள்ளது.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இருநாடுகளும் உண்மையான நண்பர்களாக இணைந்து செயல்பட வேண்டும் என்பது எனது கனவு. இரண்டு நாடுகளுக்கும் இடையே எளிதாக மக்கள் சென்று வர வேண்டும். நீங்கள் இந்தியர்கள் நான் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவள். நாம் இருவரும் இப்போது ஒரு நிகழ்ச்சிக்காக உரையாடிக் கொள்ள முடிகிறது. அப்படி இருக்கும்போது, மற்றவர்கள் இடையே மட்டும் எதற்காக வெறுப்புணர்வு இருக்க வேண்டும்? மனிதாபிமான அடிப்படையில் அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும்.

அனைத்து மக்களும் அமைதியோடு வாழ வேண்டும். இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் உண்மையான எதிரி வறுமை, பாகுபாடு, சமத்துவமின்மை போன்றவைதான். இதற்கு எதிராகத்தான் இரண்டு நாடுகளும் போராட வேண்டும். அனைத்து பெண் குழந்தைகளும் கல்வி நிலையங்களுக்குச் சென்று கல்வி கற்க வேண்டும் என்பது என் கனவு" எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: "இந்த முறை நிச்சயம் சுட்டு வீழ்த்துவேன்" : மலாலாவுக்கு ட்விட்டரில் கொலை மிரட்டல் விடுத்த தீவிரவாதி!