India

தற்கொலைக்கு ஐஸ்கிரீமில் எலிமருந்து; தங்கைக்கும், மகனுக்கும் எமனான பெண்!

கேரள மாநிலம், கான்கன்காட் பகுதியைச் சேர்ந்தவர் வர்ஷா. சில நாட்களாக இவர் மன உளைச்சலில் இருந்ததால், ஐஸ் கிரீமில் எலி மருந்தை கலந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். பாதி ஐஸ்கிரீம் சாப்பிட்டபோதே அவருக்கு மயக்கம் வந்துள்ளது. இதனையடுத்து அவர் மீதமிருந்த ஐஸ்கீரிமை அப்படியே வைத்துவிட்டு தனது அறைக்குச் சென்றுள்ளார்.

இந்நிலையில், வீட்டில் இருந்த ஐஸ் கிரீமை கண்ட அவரது மகனும், வர்ஷாவின் தங்கையும் அதைச் சாப்பிட்டுள்ளனர். பிறகு இவர்கள் இருவரும் உடனடியாக பிரியாணி சாப்பிட்டுள்ளனர். இதையடுத்து சில மணி நேரத்திலேயே, வர்ஷாவின் மகனுக்கு கடுமையான வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் சிறுவனை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தான்.

இதையடுத்து, எலி மருந்து ஐஸ் கிரீமைச் சாப்பிட்ட வர்ஷாவின் சகோதரிக்கும் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. அவரையும் மருத்துவமனையில் சேர்த்தனர். ஒருவாரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இருவரும் பிரியாணி சாப்பிட்டதால் தான் உயிரிழந்தனர் என குடும்பத்தினர் நினைத்திருந்தனர்.

இந்நிலையில், காவல்துறையினர் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது, வர்ஷா மன உளைச்சலில் இருந்ததால், ஐஸ் கிரீமில் எலி மருந்தை கலந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாகவும், மீதி இருந்த ஐஸ் கிரீமை தான் இவர்கள் சாப்பிட்டிருக்கிறார்கள் எனவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து காவல்துறையினர் வர்ஷாவை கைது செய்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: சுண்டுவிரல் காயத்திற்கு மருத்துவமனை சென்றவரின் பரிதாப நிலை : மருத்துவர்களின் அலட்சியத்தால் ஏற்பட்ட சோகம்!