India

“எந்த மொழியும் எந்த மாநிலத்தின் மீதும் திணிக்கப்படமாட்டாது” : தி.மு.க MP கேள்விக்கு மத்திய அரசு பதில் !

புதிய கல்விக் கொள்கை தொடர்பாக தமிழச்சி தங்கபாண்டியன் மக்களவையில் சில கேள்விகளை முன்வைத்தார். அவை வருமாறு: தேசியக் கல்விக் கொள்கையின் சில சீர்திருத்தங்களைச் சில மாநிலங்கள் ஆட்சேபிக்கின்ற தகவல் அரசுக்குத் தெரியுமா? ஆம் எனில் அதற்கு மத்திய அரசு தெரிவித்த விளக்கங்கள் என்ன?

இருமொழிக் கொள்கையைத் தான் இத்திட்டத்தின் மூலம் நிறைவேற்ற வேண்டும் என்று மத்திய அரசுக்கு சில மாநில அரசுகள் வேண்டுகோள் விடுத்து இருப்பதை அரசு அறியுமா? ஆம் எனில் அது தொடர்பாக அரசு எடுத்த நடவடிக்கை என்ன இதுதொடர்பான மத்திய அரசின் நிலைப்பாடு என்ன? என இவ்வாறு அவர் எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் அளித்த பதில் வருமாறு:-

புதிய தேசிய கல்விக் கொள்கை 2020 என்பது பரிபூரணக் கலந்தாய்வுகளுக்குப் பின்னர் இறுதி வடிவம் பெற்றிருக்கிறது. இதுகுறித்து மாநில அரசுகள், யூனியன் பிர தேசங்கள் ஆகியவற்றின் ஆலோசனைகளும் பெறப்பட்டுள்ளன. அதன் பின்னரே மத்திய அரசின் மந்திரிசபை கூட்டம் இக்கொள்கைக்கு ஒப்புதல் வழங்கி இருக்கிறது. இது தொடர்பாக அனைத்து மாநில அரசுகளுக்கும் யூனியன் டெரிட்டரி அரசுகளுக்கும் மத்திய அரசு முறைப் படி தகவல் தெரிவித்திருக்கிறது.

கேரள மாநிலமும் தமிழ்நாடு மாநிலமும் தமது கருத்துகளை தெரிவித்து இருக்கின்றன. நிறைவேற்றுதல் தொடர்பாக பல்வேறு கட்டங்களில் மாநில மற்றும் யூனியன் டெரிட்டரி அரசர்களோடு மத்திய அரசு கலந்துரையாடல் நடத்தி இத்திட்டத்தில் இறுதி வடிவத்தைப் பெற்றிருக்கிறது. இதனை அமல்படுத்துவதில் உள்ள புதுமையான நவீனத்துவம் பற்றியும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

இது தொடர்பாகக் கருத்தரங்கம் நடத்தப்பட்டிருக்கிறது. இந்த கருத்தரங்கில் மாநில கவர்னர்கள், யூனியன் டெரிட்டரிகளைச் சேர்ந்த லெப்டினன்ட் கவர்னர்கள் ஆகியோர் கலந்து கொண்டு தங்கள் ஆலோசனைகளைத் தெரிவித் திருக்கின்றனர்.

அதேபோல மாநில அரசுகளின்கல்வி அமைச்சர்களும், யூனியன் பிரதேசங்களின் கல்வி மந்திரிகளும் அனைத்து மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களும் இதர கல்வியாளர்களும் நாடெங்கிலும் இருந்து இந்தகருத்தரங்கில் கலந்து கொண்டு தங்களின் கருத்துகளை வழங்கி இருக்கின்றனர்.

File image

நாட்டின் பெரும்பாலான மாநிலங்கள் இந்த கல்விக் கொள்கையை அமல்படுத்துவதில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன. இதற்கான பரப்புரையில் நாட்டுமக்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது . 1968 மற்றும் 1986 ஆகிய ஆண்டுகளில் வெளியான தேசியக் கல்விக் கொள்கையில் குறிப்பிட்டபடியே 2020-இன் தேசிய கல்விக் கொள்கையும்மும் மொழிக் கொள்கையை அமல்படுத்துவதில் தான் கவனம் செலுத்தி வருகிறது.

அரசியல் சாசனம் வகுத்தளித்துள்ள நெறி முறைகளுக்கு உட்பட்டு பொது மக்களின் விருப்பங்களை மனதில் கொண்டு மாநில அரசுகளின் எண்ணங்களுக்கு மதிப்பு அளிக்கும் உணர்வோடு இத்திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது எனினும் மும்மொழிக்கொள்கையில் தளர்வுகளும் கடைபிடிக்கப்படுகின்றன. எந்த மாநிலத்தின் மீதும் எந்த மொழியும் வலுக்கட்டாயமாகத் திணிக்கப்பட்டமாட்டாது” என மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் பதிலளித்திருக்கிறார்.

Also Read: வரி விதிப்பால் உச்சத்தை எட்டியது பெட்ரோல் விலை.. ஏழை எளிய மக்களை அவதியுறச் செய்யும் மோடி அரசு!