India

பாலியல் வன்புணர்வு செய்துவிட்டு ஏமாற்றியதாக பாஜக எம்.எல்.ஏ மீது பெண் புகார்.. ராஜஸ்தானில் பரபரப்பு!

ராஜஸ்தானில் தன்னை திருமணம் செய்வதாக கூறி பாலியல் வன்புணர்வு செய்துவிட்டு ஏமாற்றிவிட்டதாக பாஜக எம்.எல்.ஏ. மீது பெண் ஒருவர் புகார் அளித்திருக்கிறார்.

ராஜஸ்தான் மாநிலம் கோகுண்டா சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏவாக இருப்பவர் பிரதாப் லால் பீல் (வயது 56). பாஜகவை சேர்ந்த இவர் மீது மத்திய பிரதேச மாநிலம் நீமுச் பகுதியைச் சேர்ந்த 35 வயது பெண் ஒருவர் பாலியல் வன்புணர்வு புகார் அளித்திருக்கிறார். ராஜஸ்தான் மாநில அரசியலை பரபரப்பாக்கியிருக்கும் இந்த பாலியல் குற்றச்சாட்டில் எம்.எல்.ஏ தன்னை திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்து பின் ஏமாற்றிவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

தன்னை திருமணம் செய்ய விரும்புவதாக எம்.எல்.ஏ தெரிவிக்க தான் அதை மறுத்துவிட்டதாகவும், இருப்பினும் அவர் தொடர்ந்து வற்புறுத்தவே, அவரது குடும்பத்தினரின் சம்மதம் கிடைத்தால் திருமணம் செய்து கொள்ளலாம் என எம்.எல்.ஏவிடம் தெரிவித்ததாக அப்பெண் கூறினார்.

தனக்கும் தன் மனைவிக்கும் இடையிலான கசப்பான சம்பவங்கள் குறித்து எம்.எல்.ஏ கூறி தான் தனது மனைவியை விவாகரத்து செய்ய இருப்பதாகவும் கூறியதாக அப்பெண் தெரிவித்தார். அதே போல நானும் எனது திருமண உறவில் விரிசல் குறித்து அவரிடம் தெரிவித்ததாக கூறியுள்ளார்.

இதனிடையே ஊரார் முன்னிலையில் தனது மனைவி முழு சம்மதத்துடன் விவாகரத்து பெற்றுக்கொண்டார் என எம்.எல்.ஏ கூறியதாக அப்பெண் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இப்புகாரை பெற்றுக்கொண்ட உதய்பூர் காவல் கண்காணிப்பாளர் ராஜீவ் பஞ்சார் எம்.எல்.ஏ பிரதாப் லால் பீல் மீது பாலியல் வன்புணர்வு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளார். மேலும் அப்பெண் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாகவும், இது மக்கள் பிரதிநிதி மீதான புகார் என்பதால் வழக்கை குற்றப்பிரிவுக்கு மாற்றி உத்தரவிட்டார்.

Also Read: 170 நாய்களை சட்டவிரோதமாக அடைத்து வைத்துள்ள சென்னை IIT நிர்வாகம் - பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு