India

“மத்திய அரசின் வலைதளங்களில் தமிழ் மொழி இடம்பெற வேண்டும்” - மக்களவையில் தி.மு.க எம்.பி வலியுறுத்தல்!

மக்களவையில் நேற்று (பிப்ரவரி 2) விதி எண் 377- இன் கீழ், மத்திய அரசின் வலைத்தளங்களில் தமிழ் மொழி இடம்பெற வேண்டும் என வலியுறுத்திப் பேசினார் தி.மு.க எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியன்.

இதுதொடர்பாக மக்களவைக் கூட்டத்தொடரில் பேசிய தமிழச்சி தங்கபாண்டியன், “மத்திய அரசின் கொள்கைகள், திட்டங்கள் தொடர்பான தகவல்களைத் தரும் அரசின் வலைத்தளங்கள், துரதிர்ஷ்டவசமாக, பெரும்பாலானவை இந்தி அல்லது ஆங்கிலத்தில் மட்டுமே வடிவமைக்கப்பட்டு உள்ளன. இதனால் அவற்றின் உள்ளடக்கங்களைப் படிக்கவும், புரிந்துகொள்ளவும் மக்கள் சிரமப்படுகிறார்கள். இது அரசியல் அமைப்பின் கீழ் பொதுமக்களின் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005ன் நோக்கத்தை இழிவுபடுத்துவதாகவும் உள்ளது. அரசின் திட்டங்கள், கொள்கைகள், முன்னேற்றம் மற்றும் சாதனைகள் பற்றி குடிமக்கள் அனைவரையும் தெரிந்துகொள்ளச் செய்வது அரசின் கடமை ஆகும்.

எனவே, இதனை உறுதி செய்ய அனைத்து அரசு வலைதளங்களும் பன்மொழித் தளங்களாக உருவாக்கப்பட்டு, தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி, குஜராத்தி, வங்காளம் உள்ளிட்ட மொழிகளில் தகவல்களை வெளியிட வேண்டும். இது அனைவராலும் படித்து புரிந்து கொள்ளப்படும்.

எனவே மொழியில் சமத்துவத்தைக் கடைபிடிக்க அனைத்து அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் வலைத்தளங்களின் தகவல்கள், தமிழ் மற்றும் பிற மொழிகளில் கிடைக்கச் செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன்.” எனப் பேசினார்.

Also Read: NLC எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் 99% வெளி மாநிலத்தவர்கள்? - தி.மு.க எம்.எல்.ஏ கண்டனம்!