India

வேலைவாய்ப்பை பெருக்குவதற்கான அறிவிப்புகளை நாளைய பட்ஜெட்டில் வெளியிட வேண்டும்: திருச்சி சிவா வலியுறுத்தல்!

வேலைவாய்ப்பை பெருக்குவதற்கான அறிவிப்புகளை நாளைய பட்ஜெட்டில் மத்திய அரசு வெளியிட வேண்டும் என்று திருச்சி சிவா எம்.பி., வலியுறுத்தியுள்ளார்.

நாளை மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கும் நிலையில், மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு தலைமையில் மாநிலங்களவை அலுவல் ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தி.மு.க மாநிலங்களவை குழுத் தலைவர் திருச்சி சிவா எம்.பி., கலந்துகொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள போதும் பெட்ரோல் டீசல் விலையை தொடர்ந்து அதிகரித்து வரும் மத்திய அரசு அதன் மூலம் கிடைக்கும் லாபத்தை பெருநிறுவனங்களின் கடனைத் தள்ளுபடி செய்வதிலேயே செலவழிக்கிறது. இதனால் மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை, விலைவாசி தான் உயர்கிறது” என்று குற்றம்சாட்டினார். இதுகுறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் எழுப்பி பேச இருப்பதாகத் தெரிவித்தார்.

மேலும், பொருளாதார இழப்பை சீர் செய்யும் வகையிலும், வேலைவாய்ப்பைப் பெருக்கும் வகையிலும் நாளைய பட்ஜெட்டின் போது கூடுதல் திட்டங்களை அறிவிக்க வேண்டும் என்றும் திருச்சி சிவா வலியுறுத்தினார்.

விவசாயிகள் பேச்சுவார்த்தை நடத்த வந்தபோது கண்டுகொள்ளாத அரசும், பிரதமரும் தற்போது அவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைப்பதாகக் கூறினார். வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெற வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் தி.மு.க தொடர்ந்து குரல் எழுப்பும் என்றும் அவர் கூறினார்.

Also Read: “மக்களுக்காக கவலைப்படும் தலைவனாக இருப்பேன்! கவலைகளைத் தீர்ப்பதில் முதல்வனாக இருப்பேன்!" : மு.க.ஸ்டாலின்