India

GSTக்கு அடுத்தபடியாக உருவாகிறது கோவிட் வரி: கஜானாவை நிரப்ப புதிதாக திட்டமிடும் மோடி அரசு?

மத்திய அரசின் பட்ஜெட்டில் தங்கத்திற்கான கலால் வரி 12.5 சதவிகிதத்தில் இருந்து ஏழரை சதவீதமாக குறைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இறக்குமதி வரி 10 சதவிகிதத்தில் இருந்து 12 சதவிகிதமாக உயர்த்தப்பட்டது. கடந்த ஓராண்டில் மட்டும் தங்கத்தின் விலை 26.2 சதவீதமாக உயர்ந்துள்ளது.

சஇதனைத் தொடர்ந்து தங்கக் கடத்தல் அதிகரித்து வருகிறது. இதனை குறைப்பதற்கு ஏற்ப கலால் வரியை 12.5 சதவிகிதத்தில் இருந்து 7.5 சதவிகிதமாக குறைக்க மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. இதற்கான அறிவிப்பு நாளை பட்ஜெட்டில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோன்று பிட்காயின் போன்ற கிரிப்டோ கரென்ஸிக்கு தடை விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கான மசோதா பட்ஜெட் கூட்டத்தொடரில் கொண்டுவரப்பட உள்ளது. அது தொடர்பான அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியிடப்படும் என்று தெரிகிறது. மேலும், டிஜிட்டல் பண பரிவர்த்தனையை அதிகரிப்பதற்கான அறிவிப்பும் வெளியிடப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மத்திய அரசின் வருவாயை பெருக்குவதற்காக கோவிட் வரி என்ற புதிய வரியை அறிவிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தனிநபர் வருமான வரியில் எந்த மாற்றமும் இல்லை என்று கூறப்படுகிறது. ஜி.எஸ்.டி கணக்கிடும் முறையில் சில மாற்றங்கள் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டில் முதலீட்டை அதிகரிப்பதற்கான சலுகைகள் வழங்கப்பட உள்ளன. இதன் மூலம் வேலை வாய்ப்பை அதிகரிக்க முடியும் என்று மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. கொரோனா பாதிப்புக்கு முன்பாகவே வேலைவாய்ப்பு திண்டாட்டம் அதிகமாக இருந்தது. கடந்த ஓராண்டில் இது மேலும் உச்சத்தை எட்டியது குறிப்பிடத்தக்கது.

Also Read: “முப்பெரும் பணக்காரர்களுக்காக இணையத்தில் ஆட்சி நடத்தும் மோடி” - வயநாட்டில் ராகுல் காந்தி கடும் விமர்சனம்!