India
“அமெரிக்கா குறித்து பேசும் மோடி, விவசாயிகள் போராட்ட விவகாரத்தில் மவுனம் காப்பது ஏன்?” - காங்கிரஸ் சாடல்!
மத்திய பா.ஜ.க அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லைப்பகுதிகளில் கடந்த நவ.,26ம் தேதி முதல் விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மத்திய அரசுக்கும் விவசாய சங்கப் பிரதிநிதிகளுக்கும் இடையே இதுவரை நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் சுமுக தீர்வு ஏற்படாததால், இன்று 10ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
இந்நிலையில், அமெரிக்க நாடாளுமன்றத் தாக்குதல் குறித்து கருத்துத் தெரிவிக்கும் பிரதமர், விவசாயிகளின் போராட்ட விவகாரத்தில் மவுனமாக இருப்பதற்குக் காரணம் அடிப்படை புரிதல் குறைவு என்று காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்துப் பேசிய ராகுல் காந்தி, “விவசாயிகள் போராட்டம் குறித்துத் தொடர்ந்து மவுனம் சாதித்து வருகிறீர்கள். காரணம், உங்களுக்கு அடிப்படையான விஷயங்களைப் புரிந்து கொள்வதில் குறைபாடு உள்ளது.
வேளாண் சட்டங்கள் இந்திய விவசாயத்தை அழிக்க வடிவமைக்கப்பட்டுள்ளன. நாட்டைச் சூழ்ந்துவரும் இந்த சோகம் குறித்து மக்களுக்குத் தவறான தகவல்களை வழங்கவே அரசாங்கம் விரும்புகிறது. ஆனால், உண்மையில் அதைவிடப் பெரிய சோகம் என்னவென்றால் இந்தியா இப்போது 4-5 பேருக்குச் சொந்தமானது என்பதுதான்” என விமர்சித்துள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவரும் எம்.பி.,யுமான ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், “விவசாயிகளும் மத்திய அரசும் இன்று 10வது சுற்று பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். கடந்த காலத்தை ஒதுக்கிவைத்துவிட்டு புதிதாக ஒன்றைத் துவங்க மத்திய அரசு மறுக்கும்போது நாம் அவர்களிடம் எவ்வாறு நேர்மறையான பதிலை எதிர்பார்க்க முடியும்?
மத்திய அரசு இனியும் காலம் தாழ்த்தாமல் புதிதாக ஒரு பேச்சுவார்தையைத் துவங்க வேண்டும். அரசு முன்வந்து விவசாயிகளுக்கு எது தேவை, எது தேவையில்லை என்பது குறித்து அறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுவே அரசு முன்னோக்கிச் செல்லும் வழி” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
தமிழ்நாடெங்கும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு: திமுக இளைஞரணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 9 தீர்மானங்கள் என்ன?
-
“மனிதநேயமற்ற கொடூரமான படுகொலை” : பெ.சண்முகம் கடும் கண்டனம்!
-
”கோவை சிறுமி கொலை.. கேள்விக்குறியான மாநில சட்டம் ஒழுங்கு.. நீதி வேண்டும்”: எதிர்க்கட்சித் தலைவர் கண்டனம்!
-
”தமிழ்நாட்டை உலுக்கிய கோவை சிறுமி கொலை.. சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு.. மவுனத்தில் முதல்வர் விஜய்!”
-
”இந்தியப் பொருளாதாரத்தில் மந்தநிலை.. ஐ.நா.வின் கணிப்பு.. பொய் கூறுகிறாரா பிரதமர்?” - முரசொலி தலையங்கம்!