India

“22 ஆண்டுகளில் இல்லாத அளவாக வாராக்கடன் அதிகரிப்பு” : மோடி ஆட்சியின் அடுத்த அவலம் - RBI அதிர்ச்சி தகவல்!

இந்தியாவில் ஏற்பட்டிருக்கும் கொரோனா பாதிப்பை விட, இந்திய பொருளாதாரம் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளது. முன்னதாகவே, பா.ஜ.க ஆட்சியில் கடும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்த இந்தியா, கொரோனா ஊரடங்கால் மேலும் பலத்த அடிவாங்கியுள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் வாராக்கடன் அளவு உயர்ந்துள்ளது.

குறிப்பாக இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் குறைந்து, மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் வரையில், இந்திய வர்த்தகச் சந்தைகள் மீண்டுவர வாய்ப்பில்லை என பொருளாதார வல்லுநர்கள் கூறிவந்த நிலையில், இந்திய வங்கிகளில் வாராக்கடன் உயர்ந்து, வங்கியின் மூலதனம் காலியாகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்திய வங்கிகளின் வாராக்கடன் அளவு, 2020-ம் ஆண்டை விடவும், 2021-ல் இரண்டு மடங்கு உயரும் ஆபத்து உள்ளதாக ரிசர்வ் வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், “2020 செப்டம்பர் 30 அன்று இந்திய வங்கிகளின் மொத்த கடன் அளவில் வாராக்கடன் 7.5 சதவிகிதமாக இருந்த நிலையில், 2021 செப்டம்பர் 30 அன்று 13.5 சதவிகிதமாக உயரும். இதுவே 2021 -2022ம் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டு முடிவில் 14.8 சதவிகிதமாக உயரும்” எனத் தெரிவித்துள்ளது.

அதுமட்டுமல்லாது, வாராக்கடன் 14.8 சதவிகிதமாக உயரும் பட்சத்தில், அது கடந்த 22 ஆண்டுகளில் இல்லாத உச்சபட்ச வாராக்கடன் அதிகரிப்பாக இருக்கும் என்றும் மோசமான விளைவு காத்திருக்கிறது (worst is behind us) என்றும் ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது.

முன்னதாக எஸ்.பி குளோபல் ரேட்டிங்ஸ் நிறுவனம் கொரோனாவுக்கு முன்பு மோசமான நிதிநிலையிலும், அதிக வாராக்கடனிலும் இருந்த வங்கிகள் இனிவரும் காலகட்டத்திலும் அதிகளவிலான பிரச்னைகளை எதிர்கொள்ளப் போகிறது. மேலும், இந்திய வங்கிகளின் நிகர வாராக்கடன் அளவு 11 சதவிகிதம் வரையில் அதிகரிக்கும் என எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.

Also Read: “பொங்கல் பரிசுத்தொகையை நாங்கள்தான் கொடுப்போம்” : ரேஷன் கடை ஊழியர்களிடம் அத்துமீறும் ஆளுங்கட்சியினர்!