India

FARM LAWS-ஐ நிறைவேற்ற கருத்துகள் கேட்கப்பட்டதா? எந்த தகவலும் இல்லையென கைவிரித்த மோடி அரசு - RTIல் அம்பலம்

வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியின் எல்லைகளில் கடந்த 47 நாட்களாக பஞ்சாப், ஹரியானா, மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், ஒடிசா, குஜராத் என பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் கடுமையான குளிர் மற்றும் மழைக்கு இடையே போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

இதுவரையில் மத்திய அரசுடன் 8 கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டபோதும் மோடி அரசு வேளாண் சட்டங்களை திரும்பப் பெற மறுத்துவிட்டது.

இந்நிலையில், வேளாண் சட்டங்களை இயற்றுவதற்கு முன்பாக பொதுமக்களிடம் எத்தனை முறை கருத்து கேட்கப்பட்டது..? எங்கு இந்த கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தப்பட்டன? எத்தனை பேரிடம் கருத்து கேட்கப்பட்டது..? எந்தெந்த விவசாய அமைப்புகளுடன் கருத்துக்கள் கேட்கப்பட்டன..? என்கிற விபரங்களை தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் அஞ்சலி பரத்வாஜ் என்பவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Also Read: “உச்சநீதிமன்ற அறிவுரையை ஏற்று வேளாண் சட்டங்களைச் செயல்படுத்துவதை உடனடியாக நிறுத்துக” : மு.க.ஸ்டாலின்

இதற்கு பதிலளித்துள்ள மத்திய அரசு, வேளாண் சட்டங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு முன்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டது தொடர்பாக எந்த ஆவணங்களும் இல்லை என தெரிவித்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் மாநில அரசுகளுடன் இந்த மசோதாக்கள் குறித்து கருத்துக்கள் கேட்கப்பட்டதா அதன் விவரங்களையும் வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டிருந்தார். மேலும் மசோதாக்களை நாடாளுமன்றத்தில் கொண்டு வருவதற்கு முன்பாக 30 நாட்களுக்கு முன் பொதுவெளியில் வரைவு மசோதா வெளியிட வேண்டும் என்கிற நடைமுறை பின்பற்றப்பட்டதா..? எப்போது வெளியிடப்பட்டது என்கிற பல்வேறு அடுக்கடுக்கான கேள்விகளை ஆர்டிஐ தகவல் மூலம் அவர் கேட்டிருந்தார்.

இவற்றை ஆய்வு செய்த மத்திய விவசாயத் துறை அமைச்சகம் இந்த கேள்விகளுக்கான எந்த பதிலும் தங்களிடம் இல்லை என்று கூறி பதில் அனுப்பியுள்ளது. இதன் மூலம் மத்திய அரசு வேளாண் சட்டங்களை நிறைவேற்றும் முன் பொதுமக்களிடமும், மாநில அரசுகளுடனும் எந்த கருத்தும் கேட்கவில்லை என்பது அம்பலமாகியுள்ளது.

Also Read: வேளாண் சட்டங்களை இதுகாறும் நிறுத்திவைக்காதது ஏன்? - மோடி அரசை விளாசிய உச்சநீதிமன்றம்!