India
“சட்டப்படிப்பையும் எட்டாக் கனியாக்க திட்டமா?” - பார் கவுன்சில் அறிவிப்புக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
“முதுநிலை சட்டப் படிப்பிற்கு இனிமேல் அகில இந்திய நுழைவுத் தேர்வு என்ற இந்திய பார் கவுன்சிலின் அறிவிப்பினை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்” என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில், “முதுநிலை சட்டப் படிப்பிற்கு (எல்.எல்.எம்) இனிமேல் நீட் தேர்வு போன்று அகில இந்திய நுழைவுத் தேர்வு” என இந்திய பார்கவுன்சில் அறிவித்திருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. ஏற்கனவே கிராமப்புற மற்றும் நகர்ப்புற மாணவர்களின் மருத்துவக் கனவை பறித்து விட்ட மத்திய பா.ஜ.க அரசு இப்போது, “இந்திய பார் கவுன்சில்” மூலமாக சட்டக் கல்வியையும் கிராமப் புற மாணவர்களுக்கு எட்டாக் கனியாக்கி விலக்கி வைக்கும் விதத்தில் இந்தத் தேர்வினை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்து- அதற்காக அரசிதழும் வெளியிட்டிருப்பது மாநில உரிமைகளுக்கும்- கூட்டாட்சித் தத்துவத்திற்கும் எதிரானது.
முதுநிலை சட்டப் படிப்பை இரண்டு வருடங்களாக்கி- ஒரு வருட எல்.எல்.எம் ஒழிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரு அறிவிப்புகளுமே சட்டம் பயின்ற பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மற்றும் பழங்குடியின இளைஞர்கள் யாரும் சட்ட மேற்படிப்பிற்கு சென்று விடக்கூடாது என்ற உள்நோக்கம் கொண்டதோ என்ற மிகப்பெரிய சந்தேகம் எழுகிறது. நீட் போன்ற இந்த அகில இந்திய நுழைவுத் தேர்வு, எல்.எல்.பி.க்கும்- அதாவது சட்டப் படிப்பிற்கும் கொண்டு வருவதற்கான முன்னோட்டம் போலவே இந்த அறிவிப்பு தெரிகிறது. சட்டப் படிப்பிலும் சமூக நீதியைப் பறிக்கும் முதுநிலை சட்டக் கல்விக்கான இந்த அகில இந்திய நுழைவுத் தேர்வு மிகுந்த கண்டனத்திற்குரியது. அரசு சட்டக் கல்லூரிகளில் சட்டக் கல்வியின் தரத்தை உயர்த்துவதற்குப் பதில், இது மாதிரி “நுழைவு தேர்வு” என்று கூறி, அடக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞர்களை மேலும் நிந்திப்பது, “சமவாய்ப்பு” வழங்குதல் என்ற அரசியல் சட்டத்தின் அடிப்படைக் கோட்பாட்டிற்கு முற்றிலும் விரோதமானதாகும்.
ஆகவே மாநில உரிமைகளுக்கு விரோதமாக- கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழை மாணவர்களின் எதிர்காலத்தை மிகவும் பாதிக்கும் “முதுநிலை சட்டக் கல்விக்கு அகில இந்திய நுழைவுத் தேர்வு” என்று மாநில அரசுகளைக் கலந்து ஆலோசித்து கருத்து அறியாமல், வெளியிடப்பட்டுள்ள இந்த அரசிதழ் அறிவிப்பினை இந்திய பார் கவுன்சில் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும்; ஏழை எளிய நடுத்தர மாணவர்களும் சட்டக் கல்வி பெறும் வகையில், அரசு சட்டக் கல்லூரிகளின் தரத்தை உயர்த்துவதற்கு மாநில அரசுகளுக்கு மத்திய பா.ஜ.க அரசு உதவிட முன் வந்திட வேண்டும் என்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்." எனக் குறிப்பிட்டுள்ளார்.
Also Read
-
“அழிவை உருவாக்க துடிக்கும் பாஜக... சட்டத்தை மாற்ற நினைப்பவர்களை மக்கள் மாற்றுவார்கள்” : முரசொலி சூளுரை!
-
தேர்வு முடியும் முன்பே வெளியான தேர்வுத்தாள் : ராஜஸ்தான் நீட் தேர்வில் நடைபெற்ற மாபெரும் மோசடி !
-
காசாவுக்கு பிறகு லெபனானை தாக்க தயாராகும் இஸ்ரேல் ? எல்லையில் இருந்து 1,80,000 பேர் இடம்பெயர்வு !
-
பாஜக தேசிய தலைவர் JP நட்டா உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் மீது பாய்ந்த வழக்கு - பின்னணி என்ன ?
-
பாஜக தேர்தல் அறிக்கை : 76 பக்கத்தில் 67 முறை இடம்பெற்ற ‘மோடி’ பெயர் - வருத்தெடுக்கும் இணையவாசிகள்!