India

தொடர் உண்ணாநிலை போராட்டத்தை தொடங்கிய விவசாயிகள்.. தீவிரமடைகிறது வேளாண் சட்டத்துக்கு எதிரான போராட்டம்!

டெல்லியில் போராட்டம் நடைபெறும் சிங்கு, திக்ரி, ஹாசிபூர் உள்ளிட்ட இடங்களில் விவசாயிகள் இன்று காலை முதல் உண்ணாவிரதத்தை தொடங்கி இருக்கிறார்கள்.

பதினோரு விவசாயிகள் வீதம் ஒவ்வொரு இடங்களிலும் தொடர் உண்ணாவிரதம் இருக்கிறார்கள். இதன் காரணமாக விவசாயிகள் போராட்டம் மேலும் தீவிரமடைந்துள்ளதது. நாளை மறுநாள் உழவர் தினமாக கடைப்பிடிக்க முடிவு செய்துள்ளனர். அன்று அனைத்து விவசாயிகளும் மதிய உணவை தவிர்க்க முடிவு செய்துள்ளனர்.

டிசம்பர் 25, 26, 27 தேதிகளில் ஹரியானா மாநிலம் முழுவதும் சுங்கச்சாவடிகளின் முன்பாக மறியல் போராட்டம் நடத்தப் போவதாகவும் கூறியுள்ளனர்.

27 ஆம் தேதி மோடி நடத்தும் இந்த ஆண்டின் கடைசி மன்கிபாத் நிகழ்ச்சியின் போது நாடு முழுவதும் விவசாயிகள் மணி அடித்து தங்களது எதிர்ப்பினை தெரிவிக்கவும் முடிவு செய்துள்ளதாக விவசாய சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் தெரிவித்தனர்.

மேலும், 26ஆம் தேதி வெளிநாடுகளில் உள்ள அனைத்து இந்திய தூதரங்கள் முன்பாக விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடத்த வேண்டும் என்று விவசாய சங்கங்கள் வெளிநாடுவாழ் இந்தியர்களைக் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இதனிடையே மத்திய அரசு மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது. பேச்சுவார்த்தைக்கு தயார் என்றால் தேதியை விவசாயிகளே முடிவுசெய்து தெரிவிக்கும்படி விவசாயத்துறை இணை செயலாளர் விவேக் அகர்வால் 40 சங்கங்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

Also Read: “உங்கள் பார்வை தவறானது; நாங்கள் அரசியல் கட்சிகளை சாராதவர்கள்” : பிரதமர் மோடிக்கு விவசாயிகள் கடிதம்!