India

ஹத்ராஸ் வன்கொடுமை: கயவர்கள் நால்வர் மீது 2000 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது சி.பி.ஐ!

உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் நகரைச் சேர்ந்த 19 வயது பட்டியலினப் பெண் வேறு சமூகத்தைச் சேர்ந்த 4 பேர் கொண்ட கும்பலால் கடந்த செப்டம்பர் மாதம் 14ம் தேதியன்று கடுமையாகத் தாக்கப்பட்டு கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார்.

மேலும் அந்த 4 பேரும் சேர்ந்து அந்த இளம்பெண்ணின் நாக்கை வெட்டியுள்ளனர். ரத்த வெள்ளத்தில் சாலையோரத்தில் மீட்கப்பட்ட அந்தப் பெண், டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.

இதனையடுத்து அந்தப் பெண்ணின் உடல் டெல்லியில் இருந்து அவருடைய கிராமத்துக்கு நள்ளிரவில் கொண்டு செல்லப்பட்டதோடு, பெற்றோரின் அனுமதியில்லாமல் உத்தர பிரதேச மாநில போலிஸாரே தகனம் செய்தனர்.

இந்த நிகழ்வு நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதோடு பல்வேறு தரப்பினரால் பெரும் போராட்டங்களும் வெடித்தன. உயிரிழப்பதற்கு முன்னதாக, பாதிக்கப்பட்ட அப்பெண் தன்னை ஹத்ராஸ் கிராமத்தைச் சேர்ந்த சந்தீப்(22), லவகுஷ்(19), ராம்குமார்(28), ரவி(28) ஆகிய நால்வரே வன்கொடுமை செய்ததாக வாக்குமூலம் அளித்திருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

ஆனால், ஹத்ராஸ் சம்பவத்தை விசாரித்து வந்த ஏ.டி..ஜிபி பிரசாத் குமார் அது வன்கொடுமையே இல்லையேன அபாண்டமாக தெரிவித்திருந்தார். இது பலரது கோபங்களுக்கும் கொந்தளிப்புக்கும் உள்ளானதை அடுத்து இவ்விவகாரம் குறித்த வழக்கு அலகாபாத் உயர்நீதிமன்ற கண்காணிப்பில் சி.பி.ஐ வசம் சென்றது.

இதனையடுத்து, சி.பி.ஐ பல கட்ட விசாரணைகளிலும் கள ஆய்வுகளிலும் ஈடுபட்டதன் மூலம் வன்கொடுமையில் ஈடுபட்ட நால்வர் மீதும் 302, 376, 376ஏ, 376டி, 3(2) மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டங்களின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டதோடு 2000 பக்கத்திற்கு குற்றப்பத்திரிகையை விசாரணையை கண்காணிக்கும் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ அமர்வில் தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கு ஜனவரி 27ம் தேதி விசாரணைக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.