India

“பீகாரில் பசுவைக் கடத்தியதாக கூறி இந்துத்வா கும்பல் கொலைவெறித் தாக்குதல்” : இஸ்லாமிய இளைஞர் படுகொலை!

பிரதமர் மோடி ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து பசு பாதுகாப்பு என்ற பெயரில் வன்முறையில் ஈடுபடும் கும்பல்களின் அராஜகம் அதிகரித்துள்ளது. அதற்கு எதிராக புகாரளித்தாலும் காவல்துறை மற்றும் அரசுத் தரப்பில் இருந்து எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் குற்றம் புரிபவர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டையே மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், மீண்டும் பீகார் மாநிலத்தில் பசுமாட்டை திருடியதாக இஸ்லாமிய இளைஞர் மீது தாக்குதல் நடத்தியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

பீகார் மாநிலம் பாட்னா, புல்வாரிஷரீப் பகுதியைச் சேர்ந்த 32 வயதான இளைஞர் முகம்மது ஆலம்கீர். இவரை அதிகாலை 3 மணியளவில் ஸ்ரீகாந்த் ராய் என்பவர் தனது கால்நடை கொட்டகையில் இருந்து மாடுகளைத் திருட முயன்றதாக பிடித்து தாக்கியுள்ளார்.

மேலும் காவல்துறைக்கு தகவல் கொடுக்காமல் ஸ்ரீகாந்த் ராயின் ஊரைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் கொடூரமாக தாக்கியுள்ளனர். தாக்குதலில் பலத்த காயமடைந்த முகம்மது ஆலம்கீர் சம்பவ இடத்திலேயே மயக்கமடைந்துள்ளனர்.

இதனையடுத்து சம்பவம் அறிந்து வந்த போலிஸார் ஆலம்கீரை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் ஆலம்கீர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதனையடுத்து இதுதொடர்பாக கொலை வழக்குப் பதிவு செய்த போலிஸார், கும்பல் தாக்குதலில் ஈடுபட்ட 6 பேரைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் தாக்குதலில் ஈடுபட்டவர்களையும் போலிஸார் தேடி வருகின்றனர்.

மாட்டை திருடியதாக இஸ்லாமியர் ஒருவரை இந்துத்வா கும்பல் அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: யாரை பாதுகாக்க அவசர அவசரமாக இந்த வேளாண் சட்டத்தை கொண்டு வந்தீர்கள்? - மோடி அரசுக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி!