India

கேரள உள்ளாட்சித் தேர்தலில் இடதுசாரிகள் அமோக வெற்றி... படுதோல்வியடைந்த பா.ஜ.க!

கேரள மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. அதன்படி, பெருவாரியான இடங்களில் இடதுசாரி ஜனநாயக முன்னணி வெற்றி பெற்றுள்ளது.

500க்கும் மேற்பட்ட கிராம பஞ்சாயத்துகளையும், 86ல் 35 நகராட்சிகளையும், 14ல் 10 மாவட்ட ஊராட்சிகளையும், 6ல் 3 மாநகராட்சிகளையும் இடதுசாரி ஜனநாயக முன்னணி கைப்பற்றியுள்ளது.

காங்கிரஸ் கட்சி 3 மாநகராட்சிகளிலும், 45 நகராட்சிகளிலும், 4 மாவட்ட ஊராட்சிகளிலும் 300க்கும் மேற்பட்ட கிராம பஞ்சாயத்துகளிலும் வென்றுள்ளது. இந்தத் தேர்தலில் பா.ஜ.க படுதோல்வியைச் சந்தித்துள்ளது.

கேரளா உள்ளாட்சி தேர்தலில் இடது ஜனநாயக முன்னணியின் மகத்தான வெற்றிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வாழ்த்து தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

அந்தத் தீர்மானத்தில், “கேரள மாநிலத்தில் கடந்த 4 1/2 ஆண்டு காலமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தோழர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடைபெற்று வருகிறது. கேரள மாநிலத்தை இந்தியாவின் முன்னோடி மாநிலமாக திகழும் வகையில் வளர்ச்சிப் பாதையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி எடுத்துச் செல்வதால் நாடு தழுவிய பாராட்டுதலைப் பெற்று வருகிறது. கோவிட் -19 பெரும் தொற்று காலத்தில் இடது ஜனநாயக முன்னணியின் செயல்பாடு சர்வதே அளவிலும் பாராட்டுதலை பெற்றுள்ளது.

இந்த சூழ்நிலையில் தான் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. எதிர்க்கட்சிகளின் பொய்யான, அவதூறுகளுக்கு மத்தியில் மத்திய அரசு மாநில இடது ஜனநாயக முன்னணி அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த தனது கட்டுப்பாட்டிலுள்ள புலனாய்வுத்துறைகளைப் பயன்படுத்தி பல முயற்சிகளை செய்துள்ள நிலையில், ஊடகங்களும் இடது ஜனநாயக முன்னணி அரசுக்கு எதிராக, தொடர்ந்து பொய்ப் பிரச்சாரங்களை கட்டவிழ்த்து விட்டுள்ள நிலையில் தற்போது நடைபெற்றுள்ள உள்ளாட்சி தேர்தலில் கேரள மக்கள் தோழர் பினராயி விஜயன் தலைமையில் உள்ள இடது ஜனநாயக முன்னணி அரசின் மீது நம்பிக்கை வைத்து, இடது ஜனநாயக முன்னணிக்கு மகத்தான வெற்றியை வாரி வழங்கியுள்ளனர்.

எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னோடியாக, உள்ளாட்சித் தேர்தலில் இடது ஜனநாயக முன்னணி பெற்ற மகத்தான வெற்றிக்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான கேரள இடது ஜனநாயக முன்னணிக்கும், தலைமை தாங்கி சிறப்பான செயல்பாட்டின் மூலம் இவ்வெற்றியைப் பெற்ற கேரள முதல்வர் தோழர் பினராயி விஜயன் அவர்களுக்கும் சி.பி.ஐ (எம்) தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.” எனக் குறிப்பிட்டுள்ளது.

Also Read: “RGCB ஆராய்ச்சி மையத்திற்கு கோல்வால்கர் பெயர் வைப்பதா?”: கேரள முதல்வர் - அறிவியல் அமைப்புகள் கண்டனம்!