India

“சிந்து சமவெளி நாகரிகத்தில் மக்களின் விருப்ப உணவாக மாட்டிறைச்சியே இருந்திருக்கும்” : ஆய்வில் தகவல்!

இந்தியாவின் சிந்து சமவெளி நாகரிகம் உலகின் மிகப் பழைய நாகரிகங்களையொத்த தொன்மையான நாகரிகம் என வரலாற்று ஆய்வாளர்கள் கூறிவருகின்றனர். இந்நிலையில். பல ஆண்டுகளாக உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மொழி அறிஞர், தொல்லியல் துறையினர் வரலாற்று பேராசிரியர்கள் என பலரும் சிந்து சமவெளி பற்றிய தங்களின் ஆய்வுகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில், சிந்து சமவெளி நாகரிக காலத்தில் மக்கள், மாடு, ஆடு மற்றும் பன்றி இறைச்சிகளை உணவாக எடுத்துக்கொண்டதாக சமீபத்தில் நடந்த தொல்லியல் ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வின் முடிவுகள் தொடர்பாக, Journal of Archaeological Science’-ல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த ஆய்வை, இங்கிலாந்து நாட்டின் லண்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில், தெற்காசிய தொல்லியல் துறையில் சிந்து சமவெளி மக்களின் உணவு பழக்கம் குறித்த ஆய்வில் முனைவர் பட்டம் பெற்ற அக்ஷிதா சூரியநாராயணன் மேற்கொண்டுள்ளார்.

அக்ஷிதா சூரியநாராயணன் தலைமையிலான ஆய்வுக் குழு தற்போது சிந்து சமவெளி கால மக்கள் வாழ்ந்ததாக கூறப்படும், ஹரியாணா மற்றும் உத்தரபிரதேசம் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டது. அந்த ஆய்வில், கண்டெடுக்கப்பட்ட 172 மண்பாண்ட பொருட்களை சோதனை செய்ததில், பன்றி, மாடு வெள்ளாடு, செம்மறியாடு ஆகியவற்றின் இறைச்சிகளின் எச்சங்கள் இருந்தது தெரியவந்துள்ளது.

மேலும், “கிடைத்துள்ள எலும்புகளில் 50% முதல் 60% எழும்புகள் மாடுகளுடையது எனவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அக்காலத்தில் வாழ்ந்தவர்கள், அதிகளவில் மாட்டிறைச்சியை உணவுக்கு எடுத்திருக்கலாம்; அவர்களின் விருப்ப உணவாக மாட்டிறைச்சியே இருந்திருக்கும்” என அவர்கள் கருத்துகின்றனர்.

முன்னதாக, சிந்துசமவெளி நாகரிகம் திராவிட நாகரிகம் என்பதற்கு கூடுதல் ஆதாரம் கிடைத்து உள்ளது என்று பேராசிரியர் அருணன் கருத்து தெரிவித்துள்ளார். திராவிட மொழியை சிந்து சமவெளி மக்கள் பயன்படுத்தியது உறுதி என மேற்கு வங்க மொழி அறிஞர் முகோபாத்தியாய் ஆய்வில் நிரூபணம் ஆனதை சுட்டிக் காட்டி, அருணன் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.

Also Read: “முதல்வர் எடப்பாடி, ‘பச்சைத் துண்டு பழனிச்சாமி அல்ல; பச்சைத் துரோகி பழனிச்சாமி’ ”: ராஜகண்ணப்பன் விளாசல்!