India

வேளாண் சட்டங்கள் அரசியலமைப்புக்கு எதிரானவை; விவசாயிகளுக்காக இலவசமாக வாதாட தயார்: வழக்கறிஞர்கள் அறிவிப்பு!

பா.ஜ.க அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக ‘டெல்லி சலோ’ என்ற பெயரில் நாடு முழுவதுமுள்ள விவசாயிகள் டெல்லியில் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

1 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் பங்கேற்றுள்ள போராட்டத்தால், டெல்லி புறநகர்ப் பகுதிகளில் போக்குவரத்து முடங்கியுள்ளது. இதுவரை விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்குமிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் சுமுக தீர்வு எட்டப்படாததால் போராட்டம் தொடர்ந்து வருகிறது.

வேளாண் சட்டங்களை எதிர்த்து தி.மு.க எம்.பி திருச்சி சிவா, ஆர்.ஜே.டி எம்.பி மனோஜ் ஜா, காங்கிரஸ் கட்சியின் ராகேஷ் வைஷ்ணவ் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

இந்நிலையில், வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி நாளை நாடு தழுவிய முழு வேலைநிறுத்தத்திற்கு (பாரத் பந்த்) விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ளனர். இந்த வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு தி.மு.க, காங்கிரஸ், இடதுசாரிகள், சிவசேனா உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

இந்நிலையில் விவசாயிகள் போராட்டத்துக்கு உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் கூட்டமைப்பும் ஆதரவு தெரிவித்துள்ளது. இதுகுறித்து உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் தலைவரும் மூத்த வழக்கறிஞருமான துஷ்யந்த் தவே கூறுகையில்,

“மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்கள் சட்டவிரோதமானவை. அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானவை. இந்தச் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தால் அதற்கு இலவசமாக வாதாடுவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.

நாட்டின் நலன் கருதியும் விவசாயிகள் நலன் கருதியும் இந்த விவகாரத்தில் பேச்சுவார்த்தை முடியும்வரை வேளாண் சட்டங்களை அமல்படுத்துவதை நிறுத்தி வைத்து அறிவிக்கை வெளியிட வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

Also Read: “விவசாயிகளுக்கு அரணாக இருப்போம்... நாடு தழுவிய முழு அடைப்புக்கு ஆதரவளிப்போம்!” - மு.க.ஸ்டாலின் மடல்!