India

“பசுக்களை பாதுகாக்க ‘மாட்டு அமைச்சகம்’ அமைக்கும் ம.பி பா.ஜ.க அரசு” : கொந்தளிக்கும் விவசாயிகள்!

கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்பட்ட ஊரடங்கு மற்றும் பொருளாதார பாதிப்பில் இருந்து மக்கள் இன்னும் மீண்டு வரமுடியாமல் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக, மக்களிடம் வாங்கும் சக்தி குறைந்தால், குடும்பத்தை நடத்த முடியாத அளவிற்கு பொருளாதார நெருக்கடியை அன்றாடம் சந்திக்கின்றனர்.

இன்றைய சூழலில், தமது அரசியல் ஆதாயத்திற்காக இந்து மக்களிடம் ஆதரவை பெறுவதற்காக பசுக்களை பாதுகாக்கிறோம் என்ற பெயரில் ஆளும் பா.ஜ.க அரசு ஒரு அமைச்சரவையே உருவாக்கியிருப்பது விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

பா.ஜ.க அரசு பசுக்களை பாதுகாக்க ஏற்கெனவே பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் பல இந்துத்வா வன்முறைக் குழுக்களும் நாடுமுழுவதும் உருவாகியுள்ளன. அந்தக் குழுக்களின் கொலைவெறியால் பலர் தங்களின் உயிரை இழந்துள்ளனர்.

இந்நிலையில், பசு மாட்டுக்காக தனியாக ஓர் அமைச்சகம் அமைக்கப்பட வேண்டும் என பா.ஜ.க அமைச்சரும், இந்துத்வா கும்பலும் வலியுறுத்தியதைத் தொடர்ந்து கால்நடைகளின் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டிற்காக மாட்டு அமைச்சகம் உருவாக்கப்படும் என மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சிவராஜ் சிங் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “மத்திய பிரதேசத்தில் கால்நடைகளின் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டிற்காக 'Cow Cabinet' என்ற மாட்டு அமைச்சகம் உருவாக்கப்படுகிறது.

இந்த அமைச்சகத்தில் கால்நடை பராமரிப்பு, வன, பஞ்சாயத்து மற்றும் ஊரக வளர்ச்சி, வருவாய், வீடு மற்றும் உழவர் நலத்துறை ஆகிய துறைகள் அடங்கும். புதிதாக அமைக்கப்பட்ட அமைச்சரவையின் முதல் கூட்டம் வரும் ஞாயிற்றுக்கிழமை கோபாஷ்டமியை முன்னிட்டு அகர் மால்வாவில் நடைபெறும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக விவசாயி ஒருவர் கூறுகையில், “வங்கிகளில் நாங்கள் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாமல், விவசாயிகள் தவிக்கும் இந்நேரத்தில் அரசு எங்கள் மீது கவனம் செலுத்தினாலே எங்களின் மாடுகளை எங்களால் ஆரோக்கியமாக வளர்க்க முடியும். நொடித்துப் போன விவசாயத்தால், தவிப்பது மாடுகள் மட்டுமல்ல; விவசாயிகளும் தான். மாடுகளின் மீது அக்கறை காட்டும் அரசு எங்களுக்காக என்ன செய்யப்போகிறது எனத் தெரிவில்லை. ” என வேதனையுன் தெரிவித்துள்ளார்.

Also Read: மாட்டிறைச்சி கடத்தியதாகக் கூறி அப்பாவி டிரைவரை காட்டுமிராண்டித்தனமாக தாக்கிய பசு குண்டர்கள்!