India

வரலாற்றில் முதன்முறையாக பொருளாதார மந்தநிலைக்குச் செல்லும் இந்தியா : RBI கட்டுரை - பா.ஜ.க அரசின் சாதனை!?

வரலாற்றில் முதன்முறையாக இந்தியா பொருளாதார மந்தநிலையை எதிர்கொள்வதாக ரிசர்வ் வங்கி மாதாந்திர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் மத்திய பா.ஜ.க அரசு ஊரடங்கை அறிவித்தது. ஊரடங்கால் வர்த்தகம், சிறு, குறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதன் காரணமாக நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி மைனஸ் 23.9 சதவீதமாக வீழ்ச்சியடைந்தது.

தொடர்ந்து ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டிலும் பொருளாதார வளர்ச்சி மைனஸ் 8.6 சதவீதம் சரியும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் நடப்பு நிதியாண்டு முழுவதும் மைனஸ் 9.5 சதவீதம் பொருளாதார வீழ்ச்சியடையும் என்று ரிசர்வ் வங்கி கணித்துள்ளது.

இந்நிலையில், ரிசர்வ் வங்கி மாதந்தோறும் வெளியிடும் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. அதன்படி, ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில் ஜி.டி.பி மைனஸ் 8.6 சதவீதம் வீழ்ச்சியடையும்.

ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள மாதாந்திர அறிக்கையில் இடம்பெற்றுள்ள நிதிக்கொள்கை துறையின் சார்பில் வெளியிடப்பட்ட கட்டுரையில், “2020-21 ஆம் நிதியாண்டில் வரலாற்றிலேயே முதல் முறையாக இந்தியா பொருளாதார மந்தநிலைக்குள் செல்கிறது.

இரண்டாவது காலாண்டிலும் பொருளாதார வளர்ச்சி மைனஸில்தான் செல்லும். தொடர்ந்து 2 காலாண்டுகளாக, ஒரு நிதியாண்டின் முதல் பாதியே மைனஸில்தான் செல்கிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Also Read: “பா.ஜ.க அரசின் நடவடிக்கைகள் எண்ணற்ற குடும்பங்களை அழித்தொழித்துவிட்டன” - ராகுல் காந்தி சாடல்!