India

“ட்ரம்புக்கு நேர்ந்த கதி  மோடி அரசுக்கும் ஏற்படும்” - மெகபூபா முஃப்தி கடும் விமர்சனம்!

14 மாதம் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முஃப்தி அண்மையில் விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து ஜம்மு பகுதிக்கு நேற்று சென்றிருந்தார்.

அங்கு செய்தியாளர்களை சந்தித்த அவர், அமெரிக்காவில் ஆட்சி அதிகாரத்தில் இருந்த டொனால்ட் ட்ரம்புக்கு ஏற்பட்ட அதே நிலை மோடியின் பாஜக ஆட்சிக்கும் ஏற்படும் என தெரிவித்திருக்கிறார்.

ஆட்சி அதிகாரத்தில் இருந்து செல்வதற்கு முன்பு நாட்டின் வளங்கள் முழுவதையும் விற்கும் முயற்சியில் பாஜக அரசு திண்ணமாக செயல்பட்டு வருகிறது. இன்று வேண்டுமானால் பாஜகவின் காலமாக இருக்கலாம்.

ஆனால் நாளை எங்களுக்கான காலமாக அமையும். அப்போது அமெரிக்காவில் ட்ரம்புக்கு நேர்ந்த கதியே மோடிக்கும் நடக்கும். ஊழல் மிகுந்த கட்சியாக இருக்கும் பாஜக எங்களை ஊழல்வாதிகள் என்கிறது.

ஆனால் அவர்களது சாதனைகளை சற்று உற்றுநோக்கினால் மட்டுமே தெரியும். எவ்வித ஆதாரங்களும் இல்லாத ஒரு கட்சியின் பெயரில் எப்படி இந்த அளவுக்கான பணம் வந்து சேர்ந்துள்ளது என்று மெகபூபா கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், தங்களது அலுவலகங்களில் கூட தேசியக் கொடியை பறக்கவிடாத அரைக்கால் சட்டை அணிகிறவர்களெல்லாம் தேசியக் கொடி குறித்து பாடம் நடத்துகிறார்கள் என ஆர்.எஸ்.எஸை சாடிய மெகபூபா, காஷ்மீரில் பயங்கரவாதத்தை ஒழித்துவிட்டதாக கூறிக்கொண்டிருக்கும் மத்திய பாஜக அரசு, வாஜ்பாயின் வழியில் நடக்க தவறிவிட்டது என குற்றஞ்சாட்டியுள்ளார்.

Also Read: இந்தியாவின் பெருமையையும், பொருளாதாரத்தையும் அழித்துவிட்டார்கள்: மோடி அரசை வெளுத்து வாங்கிய ராகுல் காந்தி!