India

“இதற்காகத்தான் இத்தனை நாட்களாக காத்திருந்தோம்”-அர்னாப் கோஸ்வாமியால் தற்கொலை செய்துகொண்டவரின் மகள் பேட்டி!

2018ஆம் ஆண்டு மும்பையைச் சேர்ந்த உள் அலங்கார நிபுணர் அன்வே நாயக் மற்றும் அவரின் தாயார் இருவரையும் தற்கொலை செய்து கொள்ளத் தூண்டிய குற்றத்திற்காக ரிபப்ளிக் தொலைக்காட்சி சேனலின் தலைமை செய்தி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

தற்கொலைக்கு முன்பு அன்வே நாயக் எழுதிய கடிதத்தில், “ரிபப்ளிக் டிவி, ஃபெரோஸ் ஐகாஸ்ட்எக்ஸ், ஸ்மார்ட்வொர் ஆகிய மூன்று நிறுவனங்களின் உரிமையாளர்கள் கட்டணத்தைச் செலுத்தாத காரணத்தால், இந்த மோசமான முடிவை நான் எடுக்கிறேன் ” என்று குறிப்பிட்டிருந்தார்.

குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மீது ஆதாரம் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை என்று கூறி 2019 ஏப்ரலில் வழக்கை முடித்து வைத்தது ராய்காட் காவல்துறை. இந்நிலையில், அன்வேயின் மகள் அதன்யா நாயக் எழுப்பிய புதிய புகாரின் அடிப்படையில், கடந்த மே மாதம் மகாராஷ்ட்ரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக், மறு விசாரணைக்கு உத்தரவிட்டார்.

இந்நிலையில் இந்த வழக்கில் அர்னாப் கோஸ்வாமி இன்று கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்ய முயன்றபோது பெண் காவலரை தாக்கியதாகவும் அர்ணாப் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுதொடர்பாகப் பேசியுள்ள அன்வே நாயக்கின் மகள், “என் அப்பா தனக்கு தர வேண்டிய பணத்தை அர்னாப் கோஸ்வாமியிடம் கேட்டதற்கு அவர் மிரட்டப்பட்டார். பல வகைகளில் அவர்கள் எங்கள் குடும்பத்தினருக்கு மன உளைச்சல் ஏற்படுத்தினார்கள்.

என் அப்பா உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது இவ்வளவு நாட்களாக நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நடவடிக்கைக்காகத்தான் இத்தனை நாட்களாகக் காத்திருந்தோம். இந்த கைது நடவடிக்கையை வரவேற்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: டி.ஆர்.பியை விலைக்கு வாங்கி மோசடியில் ஈடுபட்ட ‘ரிபப்ளிக் டி.வி’ - மும்பை போலிஸ் வழக்குப்பதிவு!