India

‘பாகிஸ்தானின் தந்தை’ என மகாத்மா காந்தியை விமர்சித்தவருக்கு IIMC பேராசிரியர் பதவி வழங்கிய மோடி அரசு!

பா.ஜ.க அரசு தனது ஆட்சிக்காலத்தில் அரசு உயர் பதவிகளில், திறமையின் அடிப்படையில் பதவி அளிக்காமல், தங்களுக்கு சாதகமானவர்களையே நியமித்து வருகிறது. குறிப்பாக, மத்திய அரசு நியமிக்கும் பதவிகளில், இந்தி பேசும் மாநிலத்தவர்களுக்கும், பா.ஜ.கவினருமே நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

சமீபத்தில் கூட, மதுரை “எய்ம்ஸ்” மருத்துவமனை நிர்வாகக் குழுவில் தமிழக எம்.பி.க்களை நியமிக்காமல், ஏ.பி.வி.பி அமைப்பைச் சேர்ந்த மருத்துவர் சுப்பையா சண்முகம் என்பவரை நியமித்தனர். இந்த சுப்பையா சண்முகம், சமீபத்தில் ஒரு பெண்ணின் வீட்டின் முன்பு அநாகரிகமான அருவருக்கத்தக்க செயலில் ஈடுபட்டவர்.

அவரை நியமித்ததற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், தற்போது மகாத்மா காந்தியை பாகிஸ்தானின் தேசத் தந்தை என விமர்சித்த பா.ஜ.க நிர்வாகிக்கு ஐ.ஐ.எம்.சி கல்வி நிறுவனத்தின் பேராசிரியர் பதவி வழங்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றான - இதழியல் மற்றும் மாஸ் கம்யூனிகேஷன் கல்வியை வழங்கும் ஐ.ஐ.எம்.சி (Indian Institute of Mass Communication - IIMC) நிறுவனத்தின் பேராசிரியர் பதவிக்கு மத்திய பிரதேச பா.ஜ.க ஊடகப் பிரிவுத் தலைவர் அனில்குமார் சவுமித்ரா என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர், கடந்த மே மாதம் மகாத்மா காந்தி பற்றி தனது ஃபேஸ்புக் பக்கத்தில், “காந்தி தேசத்தின் தலைவர்தான். ஆனால், இந்திய தேசத்திற்கு அல்ல; பாகிஸ்தான் தேசத்திற்குத் தலைவர். இந்த நாட்டில் அவரைப்போன்று கோடிக்கணக்கானவர்கள் இருக்கின்றனர். சிலர் மதிப்புடையவர்கள். சிலர் மதிப்பற்றவர்கள்” எனப் பதிவிட்டிருந்தார்.

சவுமித்ராவின் இந்த பதிவால் கடும் சர்ச்சைகள் எழுந்தவுடன், சவுமித்ராவின் கருத்துகள் பா.ஜ.க சித்தாந்தங்களுக்கும் கொள்கைகளுக்கும் மாறாக இருப்பதாகவும், அவரை அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தே நீக்குவதாகவும் பா.ஜ.க அறிவித்தது.

அதுமட்டுமின்றி, கத்தோலிக்க தேவாலயங்களில் பாலியல் சுரண்டல்கள் நடப்பதாக “சர்ச் கே நார்க்மே நன் கா ஜீவன்” (Church ke nark me nun ka Jeevan) என்ற கட்டுரையை எழுதியதற்காக, 2013ம் ஆண்டிலும் சவுமித்ரா பா.ஜ.கவிலிருந்து நீக்கப்பட்டு, பின்னர் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.

இந்நிலையில்தான், ஐ.ஐ.எம்.சி நிறுவனத்தின் பேராசிரியர் பதவி வழங்கப்பட்டுள்ளது. சுமார் 60க்கும் மேற்பட்டோர் நேர்காணலில் கலந்துகொண்டதாகவும், அதில், சவுமித்ரா தேர்வு செய்யப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: "பெண்ணிடம் அநாகரிகமாக நடந்துகொண்டவரை மதுரை எய்ம்ஸ் நிர்வாகக்குழுவில் நியமிப்பதா?”- மு.க.ஸ்டாலின் காட்டம்!